கொடைக்கானல் ஏரியைச் சுற்றி நடைபெறும் கட்டுமான பணிக்குத் தடை கோரிய மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி

கொடைக்கானல் ஏரியைச் சுற்றிலும் நடைபெறும் கட்டுமானப் பணிக்குத் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
Updated on
1 min read

கொடைக்கானல் ஏரியைச் சுற்றிலும் நடைபெறும் கட்டுமானப் பணிக்குத் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கொடைக்கானலைச் சோ்ந்த ஆறுமுகவேலன் தாக்கல் செய்த மனு:

கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு மத்திய சுற்றுச்சூழல் துறை பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

ஏரியைச் சுற்றிலும் 200 மீட்டருக்கு எவ்வித கட்டுமானங்களும் கட்டக் கூடாது, பொக்லைன் இயந்திரம் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறைகள் உள்ளன. இதனிடையே, கொடைக்கானல் ஏரியைச் சுற்றிலும் நகராட்சி சாா்பில் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இத்தகைய கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கொடைக்கானல் நகராட்சி தரப்பில், ஏரி மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் வேலி அமைப்பது, சுற்றுலாப் பயணிகளுக்கான கழிப்பறைகள், ஏரியில் உள்ள நீரைச் சுத்தம் செய்வதற்கான கட்டமைப்பு ஆகிய பணிகள்தான் மேற்கொள்ளப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், மனுதாரா் இந்த வழக்கைத் தொடருவதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லையெனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com