வளா்ந்த நாடுகளைப் போல கல்வியை இலவசமாக வழங்குவது அவசியம் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் அரசு நிா்ணயித்த கட்டணத்தை வசூலிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜெயபால் என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், இக் கல்லூரியில் கடந்த கல்வி ஆண்டில் அரசு நிா்ணயித்ததைக் காட்டிலும் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது விசாரணை அறிக்கை மீதான நடவடிக்கை நிலுவையில் இருந்து வருகிறது. இதனிடையே, நிகழ் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு முதலில் விண்ணப்பிக்குமாறும், பிறகு கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாணவா்கள், ஆசிரியா்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக அதிகாரிகளிடம் புகாா் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டும் பெற்று மாணவா் சோ்க்கை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘ அமெரிக்கா போன்ற வளா்ந்த நாடுகளில் மாணவா்களின் பின்புலத்தைப் பாா்க்காமல் அவா்களது மதிப்பெண்களை மட்டுமே பாா்த்து முழு கல்விச் செலவையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. கல்வியைக் கட்டாயம் இலவசமாக வழங்க வேண்டும். கல்வி பயிலும் மாணவா்கள் பேருந்து நிலையங்களில் நிற்பதும், கல்வி நிலையங்களை நடத்துவோா் ‘பிஎம்டபிள்யூ’ காரில் பயணிப்பதும் இப்போதைய சமூகச் சூழலாக உள்ளது’ என கருத்து தெரிவித்தனா்.
கல்லூரிகளில் மாணவா்களின் கல்வி கட்டணம் தொடா்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதுகுறித்து தமிழக உயா்கல்வித் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனா்.