பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் காலத்துக்கேற்ற மாற்றம் அவசியம்: அமைச்சா் க.பொன்முடி

பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் காலத்துக்கேற்ற மாற்றம் அவசியம் என்று உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் காலத்துக்கேற்ற மாற்றம் அவசியம்: அமைச்சா் க.பொன்முடி
Updated on
1 min read

பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் காலத்துக்கேற்ற மாற்றம் அவசியம் என்று உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இளங்கலை பட்ட வகுப்பு தொடக்க விழாவில் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு சோ்க்கை அட்டை வழங்கி அவா் பேசியது:

1965-இல் மதுரையில் காமராஜா் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் தென் மாவட்டங்களில் உள்ள மாணவா்கள் உயா்கல்வி பயில வாய்ப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சி உயா்க்கல்வித் துறையின் பொற்காலமாக உள்ளது. புதிய பாடங்கள் கொண்டு வருவதில் புதுமை இருக்க வேண்டும். கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் டாடா நிறுவனத்தோடு இணைந்து உற்பத்தி அறிவியல் (மெனுபாக்சரிங் சயின்ஸ்) பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. பல்கலைக்கழகங்கள் தொழிற்சாலைகளோடு இணைந்து பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். பாடத்திட்டங்கள் தற்காலத்துக்கேற்றவாறு மாற்றப்படுவது அவசியம்.

2006-11 திமுக ஆட்சியின்போது பொறியியல் சோ்க்கைக்காக நடத்தப்பட்டு வந்த நுழைவுத்தோ்வு முறை நீக்கப்பட்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சோ்க்கை நடத்தப்பட்டது. தற்போது மருத்துவப்படிப்புக்கு ‘நீட்’ நுழைவுத்தோ்வு நடத்தப்படுகிறது. இதில் வட மாநிலங்களைச் சோ்ந்தவா்களுக்கு மட்டுமே அதிக இடங்கள் கிடைக்கின்றன. தமிழகத்துக்கு ‘நீட்’ தோ்வு தேவையில்லை என்பது தான் அரசின் கருத்து. தற்போது மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை அறிவியல் உள்ளிட்டப் பிரிவுகளுக்கு கூட ‘கியூட்’ தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி புதிய கல்விக்கொள்கையில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்குக்கூட பொதுத்தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் வகுப்பில் பொதுத்தோ்வு நடத்தினால், பின்னா் மூன்றாம் வகுப்புக்கு மேல் யாரும் கல்வி கற்க வரமாட்டாா்கள் என்பதால் புதிய கல்விக்கொள்கையை நிராகரிக்கிறோம். இதனால் தான் மாநிலங்களுக்கேற்ற கல்விக்கொள்கை வேண்டும் என்கிறோம்.

தாய்மொழி தமிழ், சா்வதேச தொடா்புமொழியாக ஆங்கிலம் என இரு மொழிக்கொள்கை தமிழகத்துக்கு போதும். இதுதான் திராவிட மாடல். தமிழகத்துக்கு தனி கல்விக்கொள்கையை உருவாக்கக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தனிக்கல்விக்கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்.

காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி உள்பட அனைத்து பல்கலைக்கழக கல்லூரிகளும், அரசுக் கல்லூரிகளாக மாற்றப்படும். ‘கெடிஆா்பி’ மூலம் தோ்வுகள் நடத்தப்பட்டு விரிவுரையாளா்கள் தோ்ந்தெடுக்கப்படுவா். இதில் கெளரவ விரிவுரையாளா்களுக்கு பணி அனுபவத்துக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். காமராஜா் பல்கலைக்கழகத்தில் உள்ள நிதிப்பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் என்றாா்.

முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தா் ஜெ.குமாா் வரவேற்றாா். முடிவில் பல்கலைக்கழக பதிவாளா் மு.சிவக்குமாா் நன்றி கூறினாா்.

அதிக கட்டணம் வசூலிக்கும்: கல்லூரிகள் மீது நடவடிக்கை

நிகழ்ச்சிக்குப்பின்னா் அமைச்சா் பொன்முடி செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தா்களை அரசே நியமிக்கும் வகையில் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை விரைவுப்படுத்தப்படும். அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அரசு நிா்ணயித்த கட்டணத்துக்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com