ஜில்... ஜில்... ஜிகர்தண்டா: மனம் குளிரும் மதுரையின் அடையாளம்

கடந்த 600 ஆண்டுகளாய் மதுரை மண்ணின் வரலாற்றோடும், வாழ்வோடும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது ஜிகர்தண்டா. நினைக்கும்போதே நாவில் நீர் சுரக்கும் அற்புதமான குளிர்பானம்.
ஜில்... ஜில்... ஜிகர்தண்டா: மனம் குளிரும் மதுரையின் அடையாளம்

மதுரை: கடந்த 600 ஆண்டுகளாய் மதுரை மண்ணின் வரலாற்றோடும், வாழ்வோடும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது ஜிகர்தண்டா. நினைக்கும்போதே நாவில் நீர் சுரக்கும் அற்புதமான குளிர்பானம். மதுரைக்கு வருகின்ற வெளிநாட்டாரும்கூட சுவைக்க நினைக்கும் உற்சாக பானம். மதுரையிலிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்ற ஜிகர்தண்டாவின் வரலாறும்கூட சுவை மிக்கதாகும். 

மதுரை மாநகரின் எந்தப் பக்கம் சென்றாலும் ஏதேனும் ஒரு ஜிகர்தண்டா கடையைப் பார்க்காமல் கடந்து செல்ல முடியாது. மதுரைக்கு மல்லிகை எப்படியோ, அப்படி ஒரு அடையாளம்தான் ஜிகர்தண்டாவும். ஒருமுறை இதனை சுவைத்து விட்டார்கள் என்றால், பிறகு வாழ்நாள் அடிமையாகிப் போவார்கள் என்பது நிச்சயமான உண்மை. அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தோர் ஜிகர்தண்டாவுக்காவே மதுரைக்கு வந்து செல்வதும்கூட மிக சாதாரணம்.

மதுரையில் ஜிகர்தண்டா கடைகளை நடத்துபவர்கள் பெரும்பாலும் ஒரு குடும்பத்தின் பல்வேறு கிளைகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இஸ்லாமியர்களே இக்கடையை பல தலைமுறைகளாக தொன்று தொட்டு நடத்தி வருகின்றனர். மதுரை விளக்குத்தூண் அருகேயுள்ள பிரபலமான ஜிகர்தண்டா கடையின் பொது மேலாளர் முகமது ரபீக் கூறுகையில், ' ஷேக் மீரான் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிலுள்ள ஆறாம்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது காலத்தில்தான் ஜிகர்தண்டா கொண்டு வரப்பட்டது. இந்த பானம் வடக்கிலிருந்து இங்கே கொண்டுவரப்பட்டதாகும். ஜிகர் என்றால் உள்ளம். தண்டா என்றால் குளிர். இந்தப் பெயரை மட்டும் எடுத்துக்கொண்டு, அதன் மூலப்பொருட்கள் இங்குள்ள மக்களின் உடல் நலனுக்கு ஏற்றாற் போன்று மாற்றி அறிமுகப்படுத்தப்பட்டது' என்கிறார்.

மதுரையில் தயாரிக்கப்படும் ஜிகர்தண்டாவுக்கான மூலப்பொருட்களே மிக சுவை மிக்கவை. பாலாடை, பாதாம் பிசின், கடற்பாசி, நன்னாரி சர்பத், ஐஸ்கிரீம் என்ற கலவைகளே ஜிகர்தண்டாவாக மாற்றம் பெறுகின்றன. கோடை காலத்திலும், நகர்ப்புற கடையில் பொருள்கள் வாங்கும் சமயங்களிலும் மதுரை மக்கள் புத்துணர்ச்சிக்கான தங்களின் தேர்வாக முதன்மைப் பட்டியலில் வைத்திருப்பது ஜிகர்தண்டாதான். அதேபோன்று வெளிமாவட்ட, வெளிமாநில, வெளிநாட்டுப் பயணிகளுக்கும் மதுரையின் முக்கிய அம்சமாகவும் ஜிகர்தண்டாவே திகழ்கிறது.

சென்னையை சேர்ந்த பெரோஷ்  கூறுகையில், 'மதுரைக்கு வந்த உடன் கேள்விப்பட்டேன் முதல்முறையாக  விளக்குத்தூண் வந்து ஜிகர்தண்டா அருந்துகிறேன்.  இதன் சுவை மிகவும் புகழ்வாய்ந்தது. இதற்கு முன்பாக சென்னையில் ஒருமுறை சாப்பிட்டுள்ளேன். ஆனால், மதுரையில்தான் சுவை அதிகம். மதுரையில் வந்து பருகுவதற்கான வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. இன்றுதான் கிடைத்தது. பாலின் சுவை மிகவும் எதார்த்தமாக உள்ளது' என்கிறார்.

தற்போது மதுரையில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கலாம் என்கின்றனர் வணிகர் சங்க நிர்வாகிகள். நாளன்று இந்தக் கடைகள் மூலமாக நடைபெறுகின்ற வியாபாரம் மதுரை நகர பொருளாதாரத்திற்கும் உத்வேகம் அளிக்கக்கூடியவை. மதுரையிலுள்ள சில கடைகள் சிங்கப்பூர் உள்ளிட்ட சில கிழக்காசிய நாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்ய உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மதுரை வந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மதுரையின் வரலாற்றுப் பாரம்பரியம் மற்றும் தொன்மை குறித்து நினைவிருக்கிறதோ இல்லையோ, ஆனால் அவர்கள் பருகிச் சென்ற ஜிகர்தண்டாவின் சுவை நாவுக்குள் நிறைந்திருக்கும். நினைக்கும்போதே உள்ளம் குளிரச் செய்யும். ஜிகர்தண்டாவை சுவைக்காமல் இனி மதுரையின் நினைவுகளை யாரும் கொண்டு செல்ல முடியாது என்பதே உண்மை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com