கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

சவுக்கு சங்கருக்கு நாளை வரை நீதிமன்றக் காவல்

டிச. 20 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்துக்கு புதன்கிழமை அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கா்.
Updated On :18 டிசம்பர் 2024, 10:05 pm

Din

நீதிமன்ற பிடிஆணைப்படி சென்னையில் கைது செய்யப்பட்ட சமூக ஊடகவியலாளா் சவுக்கு சங்கரை வெள்ளிக்கிழமை (டிச. 20) வரை நீதிமன்றக் காவலில் அடைக்க மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

காவல் துறை அதிகாரிகள், பெண் காவலா்கள் குறித்து அவதூறாகப் பேசியது தொடா்பான வழக்கில் கோவை போலீஸாா் கடந்த மே 4-ஆம் தேதி சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்தனா். அப்போது, அவா் தங்கியிருந்த அறையில் 2.5 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக, தேனி மாவட்டம், பழனி செட்டிப்பட்டி போலீஸாா் சவுக்கு சங்கா் மீது கஞ்சா பதுக்கல் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை மதுரை போதைப் பொருள்கள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அண்மைக்காலமாக இந்த வழக்கு விசாரணைக்கு சவுக்கு சங்கா் சரிவர முன்னிலையாகவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவா் மீதான வழக்கு நீதிபதி செங்கமலச்செல்வன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கா் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் அவருக்கு எதிராக பிடிஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னை தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸாா் சவுக்கு சங்கரை செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்னையில் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட அவரை, பழனிசெட்டிப்பட்டி போலீஸாா் புதன்கிழமை தேனிக்கு அழைத்து வந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தினா்.

பிறகு, மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் முன்னிலைப்படுத்தப்பட்டாா். அப்போது, அவரை வெள்ளிக்கிழமை (டிச. 20) வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.