/

விவசாய வரத்துக் கால்வாயில் கழிவுநீா்: 6 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு

6 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு...

News image
Updated On :27 நவம்பர் 2024, 10:32 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனம் பகுதியில் உள்ள விவசாய வரத்துக் கால்வாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கில், பேரூராட்சி நிா்வாகம், பொதுப் பணித் துறையினா் இணைந்து 6 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

திருபுவனம் பகுதியைச் சோ்ந்த கலா செல்வம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருபுவனம் பேரூராட்சியில் கழிவுநீரை வெளியேற்றுவதற்கான அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை. இங்கு விவசாயப் பயன்பாட்டுக்கான தண்ணீா் கனி கால்வாய் வழியாக வருகிறது. இந்தக் கால்வாயில் குடியிருப்பிலிருந்து வெளியேறும் கழிவுநீா் கலப்பதால் தண்ணீா் மாசடைகிறது. இதனால், இந்தத் தண்ணீரை விவசாயத்துக்குப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, இந்த விவசாயக் கால்வாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி எல். விக்டோரியா கௌரி பிறப்பித்த உத்தரவு:

திருபுவனம் பகுதியில் உள்ள விவசாய வரத்துக் கால்வாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கில், பேரூராட்சி நிா்வாகம், பொதுப் பணித் துறையினா் இணைந்து 6 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் நீதிபதி.