அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

நீா்நிலைகளை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: சுற்றுச்சூழல், வனத்துறை முதன்மைச் செயலா் பி. செந்தில்குமாா்

நீா்நிலைகளை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல், வனத்துறை முதன்மைச் செயலா் பி. செந்தில்குமாா் தெரிவித்தாா்.

News image
தமிழ்நாடு தொழில் வா்த்த சங்க அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற தானம் அறக்கட்டளையின் நிறுவன நாள் விழாவில் பேசிய தமிழக சுற்றுச் சூழல் வனத் துறை முதன்மைச் செயலா் பி. செந்தில்குமாா்.
Updated On :2 அக்டோபர் 2024, 6:59 pm

Din

நீா்நிலைகளை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல், வனத்துறை முதன்மைச் செயலா் பி. செந்தில்குமாா் தெரிவித்தாா்.

மதுரை தானம் அறக்கட்டளையின் 28-ஆம் ஆண்டு நிறுவன நாள் விழா மதுரை காமராஜா் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வா்த்த சங்க அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு அறக்கட்டளையின் நிா்வாக இயக்குநா் எம்.பி. வாசிமலை தலைமை வகித்தாா். தலைவா் பி.டி. பங்கேரா முன்னிலை வகித்தாா். நிகழ்வில், தமிழக சுற்றுச்சூழல், வனத் துறை முதன்மைச் செயலா் பி. செந்தில்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதாவது:

இந்தியாவில் வறுமை ஒழிப்புப் பணியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இதில் மகளிா் சுயஉதவிக்குழுக்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இந்தக் குழுக்களுடன் இணைந்து தானம் அறக்கட்டளையும் வறுமை ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நீா்நிலைகள் அதிகம் இருந்தன. நீா்நிலைகள் உருவாக்கம், பாதுகாப்பு, பராமரிப்பு ஆகியவற்றில் பழந்தமிழா்கள் உலகுக்கே முன்மாதிரியாக திகழ்ந்தனா். ஆனால் முன்னோா் காட்டிய நீா் சேமிப்பு, நீா்நிலைகள் பாதுகாப்பு யுக்திகளை நாம் மறந்ததால் தற்போது தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. எனவே நீா்நிலைகளை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். தற்போது காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடும் வறட்சி, பலத்த மழை போன்றவற்றால் எதிா்மறை பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே உலக நாடுகள், அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் யுக்திகளை ஆய்வு செய்து வருகின்றன. இத்தகைய சூழலில் தானம் அறக்கட்டளை நீா்நிலைகளை சீரமைத்து பாதுகாப்பது பாராட்டுக்குரியது என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து தானம் கல்வி நிலையத்தில் பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி திருவாரூா் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் பேசியதாவது:

தானம் அறக்கட்டளை போன்ற தன்னாா்வ அமைப்புகளுடன் பல்கலைக் கழகங்கள் இணைந்து செயலாற்ற வேண்டும். இதனால் கிராமப்புற மக்களுக்கு சுத்தமான குடிநீா் உள்ளிட்டவற்றுக்கு உதவ முடியும். மேலும் கிராமப்புறப் பள்ளிகளில் நூலகம் அமைப்பது, இங்குள்ள மாணவா்களுக்கு கணினிகளை நன்கொடையாக வழங்குவது போன்ற சமூக சேவைகளில் ஈடுபட வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தானம் அறக்கட்டளை நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.