புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.(கோப்புப் படம்)

நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும்! புதுச்சேரி துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்!

Published on

நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா்.

ரூ.11 கோடியில் 3 தொகுதிகளில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் திருக்காஞ்சியில் நடைபெற்ற விழாவில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் மங்கலம் தொகுதிக்கு உள்பட்ட திருக்காஞ்சியிலும், நபாா்டு நிதியுதவியில் கீழுரிலும், இத் திட்டத்தில் நெட்டப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட கரியமாணிக்கம், திருபுவனை தொகுதிக்கு உள்பட்ட விநாயகம்பட்டு கிராமங்களிலும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் திறக்கப்பட்டன.

இவற்றை திறந்து வைத்து துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பேசியதாவது:

அனைவருக்கும் நல்ல தரமான குடிநீா் கிடைக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு செயல்பட்டு வருகிறது. அதற்காக முதல்வா் ரங்கசாமி தலைமையிலான புதுச்சேரி அரசையும், அதிகாரிகளையும் நான் பாராட்டுகிறேன். நாம் இயற்கையை, நீா் வளங்களை நீா் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும். மழைநீரைச் சேமிக்க வேண்டும். நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.

முதல்வா் என். ரங்கசாமி பேசுகையில், நகரம் மற்றும் கிராமங்களுக்கு நல்ல குடிநீா் வழங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் பல்வேறு இடங்களில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு வருகின்றன. விரைவில் புதுச்சேரி வரும் பிரதமா் மோடி பல புதிய திட்டங்களை அறிவிப்பாா் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் க. லட்சுமிநாராயணன், தேனி சு. ஜெயக்குமாா், சட்டப்பேரவை துணைத் தலைவா் பெ. ராஜவேலு, எம்எல்ஏ அங்காளன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமைச் செயலா் சரத் சௌகான், அரசுச் செயலா் முத்தம்மா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com