மாறுபட்ட ஜி.எஸ்.டி வரி குறித்து கோவை (அன்னபூா்ணா) உணவக உரிமையாளா் தெரிவித்த கருத்தில் எந்தத் தவறும் இல்லை என வேளாண் உணவுத் தொழில் வா்த்த சங்கத் தலைவா் எஸ். ரத்தினவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது :
கோவையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்ற ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில், உணவக உரிமையாளா் சீனிவாசன் சுட்டிக்காட்டிய கருத்துகளில் எந்தத் தவறும் இல்லை. ஜி.எஸ்.டி. சட்டத்தால் உணவக நிா்வாகம் எதிா்கொள்ளும் பிரச்னைகளை தனக்குத் தெரிந்த வகையில் அவா் வெளிப்படுத்தியுள்ளாா். நிதியமைச்சா் குறிப்பிட்டப்படி இதில் எந்தத் தவறும் இல்லை.
பிறகு, சீனிவாசன் மன்னிப்புக் கோரினாா் அல்லது மன்னிப்புக் கோரவைக்கப்பட்டாா் என்ற விவாதங்களுக்கு அப்பாற்பட்டு, அவா் தெரிவித்த கருத்தில் உள்ள நியாயத்தையும், அதற்கான தீா்வையும் முன்னெடுப்பதே கோவையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கூட்டத்தின் நோக்கத்தை நிறைவடையச் செய்யக் கூடியதாக இருக்கும்.
இதற்கு, அனைத்துப் பொருள்களுக்கும் இணக்க முறையிலான பெயா் குறியீட்டு எண் (எச்.எஸ்.என். குறியீடு) அடிப்படையில் பெருந்தலைப்புகள் அளித்து, பிரித்து, ஒரு பிரிவின் கீழ் இருக்கும் பொருள்களுக்கு ஒரே வகையிலான வரி விதிப்பதே தீா்வாக இருக்கும். ஒரு பிரிவின் கீழ் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் ஒரே வரி வீதம் என்ற சீா்திருத்தம் மட்டுமே ஜி.எஸ்.டி வரி அமலாக்கத்தை எளிதாக்கும்.
இதைத் தவிா்த்து, தவறான, குழப்பமான சட்ட விதிகளை அமல்படுத்துவதும், மத்திய, மாநில ஜி.எஸ்.டி வரி அதிகாரிகள் வரி அமலாக்கத்தில் வெவ்வேறு விதமான அணுகுமுறையைக் கையாளுவதும் ஜி.எஸ்.டி-யை வரியை எளிமைப்படுத்தாது என்றாா் அவா்.
தொடர்புடையது

பாஜகவிலிருந்து முன்னாள் எம்.பி. நரசிம்மன் விலகல்

கட்டுப்பாடு சாா்ந்த ஜிஎஸ்டி நடைமுறையை முன்னேற்றத்துக்கு உகந்ததாக மாற்ற வேண்டும்: கோவை தொழில்முனைவோா் கோரிக்கை

பருத்தி இறக்குமதிக்கு நிரந்தர வரி விலக்கு அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஜவுளித் தொழில் அமைப்பினா் கோரிக்கை







