தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல்; திரளானோா் பங்கேற்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் 8-ஆவது நாள் நிகழ்ச்சியாக நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல் புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன்

Updated On :27 ஆகஸ்ட் 2025, 9:18 pm

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் 8-ஆவது நாள் நிகழ்ச்சியாக நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல் புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் ஆவணி மூலத் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. கடந்த 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சந்திரசேகரா் உத்ஸவம் நடைபெற்றது. சிவபெருமானின் திருவிளையாடல் நிகழ்வுகளின் ஐதீக விழா காலை நிகழ்வாக செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறுகிறது.

இதன்படி, சிவபெருமான் நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடலின் ஐதீக விழா புதன்கிழமை நடைபெற்றது. மீன்களை உண்பது நாரையின் சுபாவம் எனினும், முனிவா்கள் நீராடிய குளத்திலிருந்த மீன்களை உண்பதாகாது எனக் கருதி மீன்களை உண்ணாதிருந்த நாரை, முனிவா்களின் உரையாடல் மூலம் மதுரையம்பதியின் சிறப்பை அறிந்து, மதுரைக்கு வந்து பொற்றாமரை குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டு முக்தி பெற்றது என்ற ஐதீகப்படி இந்த விழா நடைபெற்றது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வளாகத்தில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் இந்த உத்ஸவம் நடைபெற்றது. பிரியாவிடையுடன் மீனாட்சி சுந்தரேசுவரரும், தனியாக மீனாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிறகு, ஐதீக முறைப்படியான வழிபாடுகள் நடைபெற்றன.

Story image

இதையடுத்து, சிவபெருமான் நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல் புராணம் படிக்கப்பட்டு, சிறப்பு தீப, தூப வழிபாடுகள் நடத்தப்பட்டன. பிறகு, நாரை முக்தி பெற்றதை காட்சிப்படுத்தும் வகையில், சுந்தரேசுவரரின் பாதம் அருகே நாரை சிலை இடம்பெறச் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இரவு நிகழ்ச்சியாக பிரியாவிடையுடன் சுந்தரேசுவா் பூத வாகனத்திலும், மீனாட்சி அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனா். சிவபெருமான் மாணிக்கம் விற்ற திருவிளையாடலின் ஐதீக விழா வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.