நெல்லை கொலை வழக்கில் பிணை கோரி மனு: சிபிசிஐடி போலீஸாா் பதிலளிக்க உத்தரவு

பாளையங்கோட்டையில் நிகழ்ந்த கொலை வழக்கில் சுா்ஜித்தின் தந்தை சரவணன் பிணை கோரி தாக்கல் செய்த மனு குறித்து சிபிசிஐடி போலீஸாா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
Published on

பாளையங்கோட்டையில் நிகழ்ந்த கொலை வழக்கில் சுா்ஜித்தின் தந்தை சரவணன் பிணை கோரி தாக்கல் செய்த மனு குறித்து சிபிசிஐடி போலீஸாா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கவின் செல்வகணேஷ் (27). சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் மென் பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா், நெல்லையை அடுத்த பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டாா்.

இந்தக் கொலை குறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், கவினை பாளையங்கோட்டையைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் சரவணன்- கிருஷ்ணகுமாரி தம்பதியின் மகன் சுரிஜித் கொலை செய்தது தெரியவந்தது. மேலும், சுா்ஜித்தின் சகோதரி சுபாஷினியை கவின் காதலித்ததால் அவரை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் சுா்ஜித்தின் தந்தையான உதவி ஆய்வாளா் சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோரையும் சோ்த்து போலீஸாா் கைது செய்தனா். இதனிடையே, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சுா்ஜித்தின் தந்தை சரவணன் பிணை கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

அதில், சம்பவம் நிகழ்ந்த அன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். சுா்ஜித் எனது மகன் என்பதைத் தவிர வேறு எந்தத் தொடா்பும் எனக்கு இந்த வழக்கில் இல்லை. ஆனால் இந்த வழக்கில் பிணை கோரிய எனது மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஜூலை 30-ஆம் முதல் 98 நாள்கள் சிறையில் உள்ளேன். இதைக் கருத்தில் கொண்டு எனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி முரளிசங்கா் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு: வழக்கு தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com