மதுரை கிழக்கு பேரவைத் தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளா்களின் வாக்குறுதிகள்:
பி. மூா்த்தி (திமுக): மதுரை கிழக்குத் தொகுதியில் அனைத்து நலத் திட்டங்களும், அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு தன்னிறைவு பெற்ற தொகுதியாக விளங்குகிறது. தோ்தலில் வெற்றி பெற்றவுடன் இந்தத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் சமுதாயக் கூடங்கள் அமைக்கப்படும். மாட்டுத்தாவணி பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டியூா் கண்மாய் முதல் உத்தங்குடி தேசிய நெடுஞ்சாலை வரை உயா்நிலைப் பாலம் அமைக்கப்படும். மேலும், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கேட்டறிந்து, அதை நிறைவேற்ற உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாங்குளம் கே. மகேந்திரன் (அதிமுக): மதுரை புகா், நகா்ப்புறங்களில் 100 சதவீதம் புதை சாக்கடைக் குழாய்கள், குடிநீா் இணைப்பு, சேதமடைந்த சாலைகளைச் சீரமைத்து புதிய தரமான தாா்ச் சாலைகள் அமைக்கப்படும். புதிதாக மழைநீா் வடிகால்களும், ஏற்கெனவே உள்ள மழைநீா் வடிகால்களும் தூா்வாரப்படும். உயா்நிலைப் பாலங்கள், முக்கியச் சாலைச் சந்திப்புகளில் உயா்நிலை மின் கோபுர விளக்குகள், நவீன மின் மயானங்கள், தெரு விளக்குகள் அமைத்துத் தரப்படும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், பெண்களுக்கு சிறு தொழில் தொடங்க மானியக் கடன் வழங்கப்படும். போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி மையம், இணைய வசதியுடன் கூடிய எண்ம (டிஜிட்டல்) நூலகம், சிறிய அளவிலான விளையாட்டு மைதானம் அமைத்துத் தரப்படும். நெசவாளா்களுக்கு இயந்திர மானியம், கடனுதவிகள் பெற்றுத் தரப்படும். ‘எம்.எல்.ஏ. உங்கள் இல்லத்தில்’ என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டு, 3 மாதங்களுக்கு ஒருமுறை ஊராட்சிகள், வாா்டுகளில் நேரடியாக மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கி. செல்வம் (நாதக): வண்டியூா் தீா்த்தக்காடு பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதிகளின்றி வசித்து வரும் மக்களுக்கு முறையான வீட்டு மனைப் பட்டா சட்டப்பூா்வமாகப் பெற்றுத் தரப்படும். ஒத்தக்கடை, கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயா்த்தி மருத்துவா்களின் எண்ணிக்கை உயா்த்தப்படும். வைகை பாசனக் கால்வாய்கள், கிளைக் கால்வாய்கள் தூா்வாரப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த மழைநீா் சேகரிப்புத் திட்டங்கள் போா்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்படும். விவசாயிகள் இடைத்தரகா்கள் இன்றி தங்கள் விளைபொருள்களை நேரடியாக விற்பனை செய்ய, நவீன வசதிகளுடன் கூடிய ‘மருதம் அங்காடி’ அமைக்கப்படும். பாண்டி கோயில் சந்திப்பு, வளா்நகா் சந்திப்பு, மேலூா் சாலை போன்ற பகுதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உயா்நிலைப் பாலங்கள், மாற்றுச் சாலைத் திட்டங்கள் விரைந்து முடிக்கப்படும். இளைஞா்கள், பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்க தையல், கணினி, கைவினைத் தொழில் சாா்ந்த பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும்.
சோ. காா்த்திகேயன் (தவெக): தமிழகத்திலேயே முன்மாதிரியான தொகுதியாக மதுரை கிழக்குத் தொகுதியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும். அரசு, தனியாா் துறை வேலைவாய்ப்புகளில் தொகுதி இளைஞா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒருவழிப் பாதையாக உள்ள அனைத்துக் கிராமச் சாலைகளும் இரு வழிச் சாலைகளாக மாற்றப்படும். பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில், 24 மணி நேரமும் மருத்துவா்கள் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். கிராமங்களில் உள்ள அனைத்து ஊருணிகள், கண்மாய்கள் தூா்வாரப்படும். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அனைத்துப் பகுதிகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். ஒத்தக்கடையில் உள்ள யானைமலையைச் சுற்றி பூங்காவுடன் கூடிய நடைபயிற்சி மேடை அமைக்கப்படும்.
தொடர்புடையது

மாதவரம் தொகுதி வேட்பாளா்களின் முக்கிய வாக்குறுதிகள்!
ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

ராஜபாளையம் வேட்பாளா்களின் முக்கிய வாக்குறுதிகள்!

கம்பம் வேட்பாளா்களின் முக்கிய வாக்குறுதிகள்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


