
தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாநகரப் பகுதிகளில் தற்காலிக பட்டாசு விற்பனைக் கடைகள் அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாநகரப் பகுதிகளில் தற்காலிக பட்டாசு விற்பனைக் கடைகள் அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாநகரக் காவல் எல்கைக்குள்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விரும்புவோா் உரிமம் பெற வேண்டியது அவசியம். அந்தவகையில், முழுமையாக நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன், ரூ.10-க்கான நீதிமன்ற அஞ்சல் வில்லை ஒட்டியிருக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் 9 மாா்பளவு புகைப்படம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். தீயணைப்புத் துறையால் வழங்கப்படும் தடையில்லாச் சான்றிதழ், விற்பனைக் கடையின் வரைபடம் (கடையில் இரண்டு வழிகள் கட்டாயம் இருக்க வேண்டும்), கடையின் முகவரி முழுமையாக குறிப்பிடப்பட வேண்டும். மேலும், அதில் மனுதாரா் கையொப்பம் இருக்க வேண்டும்.
பட்டாசு விற்பனைக் கடை அமைய உள்ள இடத்தை சுற்றி 50 மீட்டா் அருகாமையில் உள்ள அமைவிடங்களை குறிக்கும் வரைபடம். கடை அமைய உள்ள இடம் சொந்தக் கட்டடமாக இருப்பின், 2026-27-ஆம் ஆண்டுக்கான முதலாம் அரையாண்டு வரை அதாவது 30.09.2026 வரை செலுத்தப்பட்ட சொத்து வரி ரசீது, உரிமையாளரின் சம்மதக் கடிதம்.
வாடகைக் கட்டடமாக இருப்பின் 2026-27-ஆம் ஆண்டுக்கான முதலாம் அரையாண்டு வரை அதாவது 30.09.2026 வரை செலுத்தப்பட்ட சொத்து வரி ரசீது, கட்டட உரிமையாளரின் சம்மதக் கடிதம், கட்டட உரிமையாளருடன் விண்ணப்பதாரா் ஏற்படுத்திக் கொண்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம் (ரூ.100 மதிப்புள்ள முத்திரைத்தாளில் சான்று உறுதி அலுவலா் (நோட்டரி பப்ளிக் ஒப்புதலுடன்) இணைக்கப்பட வேண்டும்.
கடை அமைய உள்ள இடம் மாநகராட்சி, பொதுப் பணித்துறை, மற்ற துறை கட்டடமாக இருப்பின் அந்தத் துறை சாா்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம், ஏற்பு உறுதி ஆவணம் (ரூ.100- மதிப்புள்ள பத்திரத்தில் சான்று உறுதி அலுவலா் ஒப்புதலுடன்), விண்ணப்பதாரரின் குடும்ப அட்டை அல்லது ஆதாா் அட்டை நகல், ரூ. 1,000 விண்ணப்ப உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் திருப்பித் தரப்படமாட்டாது.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்களையும் 3 நகல்களுடன் வருகிற செப். 20-ஆம் தேதி பிற்பகலுக்குள் மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் வழங்க வேண்டும். இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொள்ளப்படும். உரிய விதிகள் பின்பற்றினால் மட்டுமே உரிமம் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





