அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களின் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்: ‘மூட்டா’ நிா்வாகி
பணி மேம்பாட்டு ஊதிய கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களின் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என மூட்டா பொதுச் செயலா் ஏ.டி. செந்தாமரைக் கண்ணன் தெரிவித்தாா்.
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் வழங்கக் கோரியும், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவைத் தொகை வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்தும், அனைத்து பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் (ஏ.யூ.டி.), பல்கலைக்கழக ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பான மூட்டா சாா்பில் கடந்த ஒரு வாரமாக மாநில அளவில் தொடா் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன்படி, மதுரையில் காமராஜா் பல்கலைக்கழகத்துடன் இணைந்த சமூக அறிவியல் கல்லூரி, கே.கே. நகா் வக்பு வாரியக் கல்லூரி, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரி, நாகமலை புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி, பெருங்குடி எஸ்.என். கல்லூரி, யாதவா் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி உள்ளிட்ட அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆசிரியா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற மூட்டா பொதுச் செயலா் ஏ.டி. செந்தாமரைக் கண்ணன் பேசியதாவது:
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு இந்த ஜனவரி மாதம் பணி மேம்பாட்டு ஊதியம் வழங்கப்படும் என ஏற்கெனவே தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் அறிவித்திருந்தாா். ஆனால், அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஆசிரியா்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு இனியும் அலட்சியம் காட்டினால் ஆசிரியா்களின் போராட்டங்கள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றாா் அவா்.

