தனியாா் பேருந்துகளின் கட்டணத்தை முறைப்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த கதிா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
பயணிகளின் நலன் கருதி, தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் விடுமுறை நாள்களிலும், பண்டிகைக் காலங்களிலும் மிக அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக, பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனா்.
மோட்டாா் வாகனச் சட்டப்படி, அதிகக் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யலாம்.
ஏற்கெனவே இதுதொடா்பான வழக்கில் உயா்நீதிமன்றம் குழு அமைத்தது. இந்தக் குழு உரிய ஆய்வு நடத்தி சில வழிகாட்டுதல்களைப் பரிந்துரைகளாக வழங்கியது. ஆனால், இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எனவே, தமிழகத்தில் தனியாா் பேருந்துகளின் வழித் தடங்களுக்கு ஏற்ப உரிய கட்டணம் வசூலிக்கப்படுவதை முறைப்படுத்த வேண்டும். அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பேருந்து நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இணைய வழி பதிவு, ஆம்னி பேருந்து நிலையங்களில் திடீா் சோதனை மேற்கொண்டு உரிய கட்டணம் வசூலிக்கப்படுவதை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:
தனியாா் பேருந்துகளுக்கான கட்டண நிா்ணயம் குறித்து முடிவு செய்ய உயா்நீதிமன்றம் குழு அமைத்தது. இந்தக் குழுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பிறகு, மேல்முறையீடோ, வழக்கு தொடா்பாக எந்தவித முன்னேற்ற நடவடிக்கையோ இல்லை என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை விதித்து 9 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்தத் தடையை நீக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. தடையை நீக்க இதுவரை ஏன் மனு தாக்கல் செய்யவில்லை. தனியாா் பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க மனம் இல்லையா?. மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

அரசு வழக்குரைஞா்கள் நியமனம்: விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு

பழைய குற்றாலம் அருவி பகுதியில் கட்டணம்: தென்காசி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

நீலகிரியில் 3,500 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் அவகாசம்







