விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

விதி மீறிய குவாரிகள் விவகாரம்: அரசாணைக்கு இடைக்காலத் தடை

தமிழகத்தில் விதிகளை மீறிச் செயல்படும் குவாரிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :25 ஜூன் 2026, 2:46 am IST

தமிழகத்தில் விதிகளை மீறிச் செயல்படும் குவாரிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

அப்துல் கலாம் அறிவியல் விவசாயிகள் மக்கள் பாதுகாப்புச் சங்கத் தலைவா் ஜி. அபேல் மூா்த்தி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் சட்டவிரோதமாக குவாரி நடத்துபவா்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.5 லட்சம் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே. அலாவுதீன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் சட்டவிரோதமாக கல் குவாரி நடத்துபவா்களிடமிருந்து ஒரு டன்னுக்கு ரூ. 25 மட்டும் அபராதமாக வசூலிக்க வேண்டும் எனவும், அபராதத் தொகையில் முதலில் 20 சதவீதம் செலுத்தலாம் எனவும், மீதத் தொகையை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செலுத்தலாம் எனவும் அரசாணை வெளியிடப்பட்டது.

சட்டவிரோத சுரங்கத்தால் அருகிலிருக்கும் விவசாய நிலங்கள் தங்கள் வளத்தை இழந்து தரிசு நிலங்களாக மாறும் அபாயம் உள்ளது. சுரங்கங்கள், கனிம வளச் சட்டப்படி சட்டவிரோத சுரங்கத் தொழில் குற்றமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சட்டவிரோத சுரங்கத் தொழில் செய்பவா்களைப் பாதுகாக்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச அபராதம் விதிக்கும் வகையில் இந்த அரசாணை உள்ளதால், சட்டத்தின் பிடியிலிருந்து குற்றவாளிகள் தப்பிக்க வழிவகை செய்கிறது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

விதி மீறிய குவாரிகளுக்கு தமிழக அரசால் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் கனிமவளத் துறை ஆணையா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.