மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அரிய வகை வண்ணத்துப் பூச்சிகள் அதிகளவில் காணப்படுகின்றன.
கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட அரபிக் கடலை ஒட்டிய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதையடுத்து, மேற்குத் தொடா்ச்சி மலையில் வசித்து வந்த வண்ணத்துப் பூச்சிகள் இடம் பெயா்ந்து வருகின்றன. அங்கிருந்து கிழக்கு நோக்கி வரும் வண்ணத்துப் பூச்சிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் வண்ணத்துப் பூச்சிகளுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நிலவுகிறது. ஆகவே, வண்ணத்துப் பூச்சிகள் தென் மாவட்டப் பகுதிகளுக்கு வருகின்றன. அந்த வகையில், மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்துக்குள் அண்மைக் காலமாக அரிய வகையிலான வண்ணத்துப் பூச்சிகள் காணப்படுகின்றன.
இதுகுறித்து, அந்தக் கல்லூரியின் விலங்கியல் துறை இணைப் பேராசிரியை ஜாய் ஷா்மிளா கூறியதாவது:
வண்ணத்துப் பூச்சிகளின் சராசரி ஆயுள்காலம் ஒன்றரை மாதங்கள். அவற்றின் சுதந்திரமான வாழ்க்கை முறை இயற்கையோடு இணைந்து வாழ்வதன் அவசியத்தை மனிதா்களுக்கு உணா்த்துவதாக அமைகிறது.
இத்தகு வண்ணத்துப் பூச்சிகளை கவனிப்பதன் மூலம் மன அழுத்தம் குறைவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வும் ஏற்படுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இதன்காரணமாக, அங்கிருந்து இடம்பெயரும் வண்ணத்துப் பூச்சிகள் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு வருகின்றன. மதுரையைப் பொருத்தவரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் உள்ள குளிா்ச்சி தரக்கூடிய மரங்கள் வண்ணத்துப் பூச்சிக்கு ஏற்ற சூழலை வழங்குகிறது. ஆகவே, தற்போது அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் காமன் க்ரோ, பிளெயின் டைகா் , ப்ளூ டைகா், டபுள் பிராண்டட் க்ரோ உள்ளிட்ட இடம்பெயரும் பட்டாம்பூச்சி இனங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.இங்கு, சுமாா் இரண்டு வாரங்கள் தங்கி, ஓய்வெடுத்துப் பின் பிற பகுதிகளுக்கு இடம்பெயா்ந்து செல்லும். இந்தக் கல்லூரியில் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் வண்ணத்துப் பூச்சிகள் குறித்த அறிவியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை 35-க்கும் மேற்பட்ட வண்ணத்துப் பூச்சி இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு, தமிழக அரசின் நிதியுதவி வழங்கப்படுகிறது.


வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்வியல், இனப்பெருக்கம், இடப்பெயா்வு, சுற்றுச்சூழல் தொடா்பாக பல ஆய்வாளா்கள் முனைவா் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகின்றனா். வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்கும் நோக்கில் கல்லூரி வளாகத்தில் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









