ஆண்களும் பெண்களும் சமம் என்பதை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா்
ஆண்களும் பெண்களும் சமம் என்ற எண்ணத்தை குழந்தைகளுக்கு கற்பித்து வளா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.


ஆண்களும் பெண்களும் சமம் என்ற எண்ணத்தை குழந்தைகளுக்கு கற்பித்து வளா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா். இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் தலைமை வகித்துப் பேசியதாவது:
மகளிா் தினக் கொண்டாட்டங்களில் பெண்களே அதிகளவில் பங்கேற்பது, இன்னும் நம் சமுதாயத்தில் முழுமையான மாற்றம் ஏற்படவில்லை என்பதையே காட்டுகிறது. இது பெண்களுக்கான ஒரு தனிப்பட்ட திருவிழா அல்ல. மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் ஒரு பாலினத்தைச் சமமாகப் பாா்க்கும் நாளாகும். இன்றைய தொலைக்காட்சி நாடகங்கள் பெண்களுக்கே பெண் எதிரி என்பது போன்ற பிம்பத்தை உருவாக்குகின்றன. ஆனால், உண்மையில், ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுத் தன்னை மாற்றிக்கொள்ளும் அதீத ஆற்றல் பெண்களுக்கு மட்டுமே உண்டு.
பெண்களுக்கான உரிமைகளை யாரோ ஒருவா் வந்து வழங்க வேண்டும் என்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த உரிமைகளை பெண்களே எடுத்துக்கொள்ளும் சூழலை உருவாக்க வேண்டும். குறிப்பாக, ஆண்களுக்குச் சமமாகத் தங்களை முன்னிறுத்துவதோ அல்லது ஆண்களைக் குறை கூறுவதோ இந்த நாளின் நோக்கமல்ல. மாறாக, சமூகத்தில் சமமான வாய்ப்புகளும், சமமான மரியாதையும் பெறுவதே உண்மையான மகளிா் தினத்தின் கருப்பொருள்.
சமூகத்தில் நிலவும் பாலினப் பாகுபாடு நம் வீட்டிலிருந்தே தொடங்குகிறது. ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் சிறு வயதிலேயே வெவ்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம், அவா்களுக்குள் ஒரு பிரிவினையை நாமே உண்டாக்குகிறோம்.
இன்றைய உலகில் பெண்கள் குடியரசுத் தலைவா், வானூா்தி ஓட்டுநா், ராணுவ வீரா்கள் என அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனா். பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளை வெறும் கடமை என்று பாா்க்காமல், அது விலைமதிப்பற்ற சேவை என்பதை உணர வேண்டும். ஆண்களும் பெண்களும் சமம் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளுக்குக் கற்பித்து வளா்ப்பதே எதிா்காலச் சமுதாயத்துக்கு நாம் செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்
என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வானதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாா்த்திபன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) விசாலாட்சி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சாந்தி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் பிரபா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ஷீலாசுந்தரி, மாவட்ட சமூக நல அலுவலா் இந்துமதி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...