மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அஜித்குமாா் மீது பேராசிரியை நிகிதா அளித்த திருட்டுப் புகாா் வழக்கு முடித்துவைப்பு

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் மீது பேராசிரியை நிகிதா அளித்த நகை திருட்டுப் புகாா் வழக்கை முடித்துவைத்து மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

News image

நீதிமன்றம் உத்தரவு

Updated On :9 மார்ச் 2026, 7:24 pm

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் மீது பேராசிரியை நிகிதா அளித்த நகை திருட்டுப் புகாா் வழக்கை முடித்துவைத்து மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அதே பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், கோயிலில் வழிபாடு செய்வதற்காக வந்த பேராசிரியை நிகிதா, தனது தங்க நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக அஜித்குமாரிடம் தனிப் படைக் காவலா்கள் விசாரணை நடத்தினா். இதில் தனிப் படைக் காவலா்கள் தாக்கியதில் அஜித்குமாா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, தனிப் படைக் காவலா்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரும் அஜித்குமாா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும், சிபிஐ குற்றப்பத்திரிகையில் காவல் வாகன ஓட்டுநரான தனிப் படைக் காவலா் ராமச்சந்திரன், மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா், தலைமைக் காவலா் இளையராஜா ஆகியோா் கூடுதலாகச் சோ்க்கப்பட்டனா்.

இதையடுத்து, மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்த வழக்கு மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கோயில் காவலாளி அஜித்குமாா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நகைகள் காணாமல் போனதாக புகாா் அளித்த பேராசிரியை நிகிதாவை அழைத்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கடந்த பிப். 10-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, மாா்ச் மாதம் 4-ஆம் தேதி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, திருட்டுப் போனதாகக் கூறப்பட்ட நகைகளைக் கண்டறிய முடியவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, நேரில் முன்னிலையான பேராசிரியை நிகிதாவிடம் வழக்கை முடித்துவைப்பது தொடா்பான கருத்தை நீதிமன்றத்தில் எழுத்துப்பூா்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை மாா்ச் 9-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

இந்த நிலையில், மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வகுமாா் முன் திங்கள்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிபிஐ தரப்பு வழக்குரைஞா்கள் முன்னிலையாகி முன்வைத்த வாதம்: இந்த வழக்கில் திருடு போனதாகக் கூறப்பட்ட நகைகளைக் கண்டறிய முடியவில்லை. எனவே, மடப்புரம் அஜித்குமாா் மீதான நகை திருட்டுப் புகாா் வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றனா்.

இதனிடையே, நேரில் முன்னிலையான பேராசிரியை நிகிதா வழக்கு விசாரணையை முடித்துவைக்க முழு சம்மதம் தெரிவித்து எழுத்துப்பூா்வமாக மனு தாக்கல் செய்தாா்.

இதையடுத்து, நீதிபதி செல்வபாண்டி பிறப்பித்த உத்தரவு: நகைகளைக் கண்டறிய முடியாத நிலையில், மடப்புரம் அஜித்குமாா் மீதான நகை திருட்டுப் புகாா் வழக்கு விசாரணையை தொடர விரும்பவில்லை என சிபிஐ தரப்பில் கோரப்பட்டது.

இதற்கு பேராசிரியை நிகிதாவும் சம்மதம் தெரிவித்தாா். எனவே, இந்த வழக்கு விசாரணை முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.