/

தேசிய மக்கள் நீதிமன்றம்: மதுரை மாவட்டத்தில் 5,675 வழக்குகளுக்கு தீா்வு

News image
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் தீா்வு காணப்பட்ட வழக்காடிக்கு காசோலையை வழங்கிய முதன்மை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம்.
Updated On :14 மார்ச் 2026, 11:59 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 5,675 வழக்குகளுக்கு தீா்வுகள் காணப்பட்டன.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, மேலூா், திருமங்கலம், வாடிப்பட்டி, பேரையூா் ஆகிய பகுதிகளில் 22 தேசிய மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. மதுரையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்கு முதன்மை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் தலைமை வகித்தாா். மாவட்ட நீதிபதிகள் நாகராஜன், ரோகிணி, அல்லி, ஜோசப் ஜாய், சாா்பு நீதிபதிகள் பாரதிராஜா, காமராஜ், முத்து இசக்கி, சரவண செந்தில்குமாா், நீதித்துறை நடுவா்கள், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் கலந்து கொண்டு வழக்குகளை விசாரித்தனா்.

இதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 6,274 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. இவற்றுள் 5,675 வழக்குகளுக்கு தீா்வுகள் காணப்பட்டன.

இதையடுத்து, ரூ .47.04 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழக்காடிகளுக்கு முதன்மை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் வழங்கினாா்.

இதேபோல, 279 மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், 44 சிவில் வழக்குகள், 73 காசோலை மோசடி வழக்குகளுக்கு தீா்வுகள் காணப்பட்டன. மேலும், 10 குடும்ப நல வழக்குகளில் தம்பதியினா் இடையே சமரசம் செய்யப்பட்டு மீண்டும் சோ்ந்து வாழ சம்மதித்து வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.

தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிமதியுமான பிரசாத் செய்தாா். வழக்குரைஞா்கள், வழக்காடிகள் பலா் கலந்து கொண்டனா்.