பெருவாக்கோட்டை சாலையில் மழை நீர் தேக்கம்: வாகன ஓட்டிகள்  கடும் அவதி

திருவாடானை அருகே பெருவாக்கோட்டை சாலைகள் சேதம் அடைந்து மழை நீர் தேங்குவதால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அவதிப்பட்டுவருவதாக   புகார்  தெரிவித்தனர்.
Updated on
1 min read

திருவாடானை அருகே பெருவாக்கோட்டை சாலைகள் சேதம் அடைந்து மழை நீர் தேங்குவதால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அவதிப்பட்டுவருவதாக   புகார்  தெரிவித்தனர்.
  திருவாடானை  அருகே மங்கலக்குடி, பெருவாக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து பிரிந்து செல்லும் கிராம புற சாலைகள் அரசத்தூர், பாசானி, கட்டிமங்கலம், வலையனேந்தல், கல்லறை குடியிருப்பு மற்றும் காட்டியனேந்தல் பகுதிக்கு செல்கிறது.
 சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஏற்கெனவே இருந்த தார் சாலையை புதுப்பிக்க பல மாதங்களுக்கு முன்  சாலை தோண்டப்பட்டது. பின்னர் அந்த பணி கிடப்பில் போடப்பட்டது.
 இதனால் சாலை குண்டும் குழியுமாகி சிறு மழைக்கு கூட தண்ணீர் தேங்கிவிடுகிறது.
  இந்த சாலையில் இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவது வாடிக்கையாகி விட்டது. இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில்,  எங்கள் ஊருக்கு பேருந்து வசதி கிடையாது.
  நாங்கள் பள்ளி, மருத்துவமனை, வர்த்தக நிறுவனங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் திருவாடானை ,தேவகோட்டை ஆகிய ஊர்களுக்குத் தான் செல்ல வேண்டும்.
   எங்கள் ஊரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு வந்து தான் பேருந்து மூலம் செல்ல வேண்டும். அந்த சாலையும்  தற்போது பழுதாகி பெரும் சிரமத்திற்குள்ளாக வேண்டியுள்ளது.
  பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சைக்கிள் செல்வதற்குக் கூட சிரமப்பபட்டு தான் செல்கின்றனர். இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் எந்த வித பயனும் இல்லை.
 மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தும் இது வரை  எந்த வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.
 எனவே இன்னும் சில தினங்களில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com