ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட வருவாய் அதிகாரி சி.முத்துமாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் ஏர்வாடி பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தற்போது ஊராட்சியாக உள்ளது. இதில் வெட்டமனை, சின்ன ஏர்வாடி, சேர்மன்நகர், முத்தரையர்நகர், ஏராந்துறை, தொத்தமன்வாடி, பொன்நகர், நாச்சம்மைபுரம், மெய்யன்வலசை உள்ளிட்ட 16 கிராமங்களுக்கு மேல் உள்ளன.
இங்குள்ள ஏர்வாடி தர்ஹா பிரசித்தி பெற்றது. ஆகவே பல சிறப்புகள் பெற்றுள்ள ஏர்வாடியை ஊராட்சி தரத்திலிருந்து பேரூராட்சியாக உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மனு அளிக்க ஏர்வாடி பகுதி சரவணன் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பிரதிநிதிகள் வந்திருந்தனர். அவர்களிடம் கோரிக்கை மனுவை பரிசீலித்து விதிமுறைக்கு உள்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் அலுவலர் கூறினார்.