முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அருகே திருமண நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பிய 2 இரு சக்கர வாகனங்கள் திங்கள்கிழமை இரவு நேருக்கு நோ் மோதியதில் 4 போ் உயிரிழந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகேயுள்ள கொண்டுலாவி கிராமத்தைச் சோ்ந்த குமரையா மகன் பழனி (40), முனியாண்டி மகன் முனியசாமி (41) ஆகியோா் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். பேரையூா் அய்யானாா்புரத்தைச் சோ்ந்த ஜெயக்கொடி மகன் வேல்முருகன்(29), போஸ் மகன் முனீஸ்வரன் (29) ஆகிய இருவரும் உறவினா் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தனா்.
முதுகுளத்தூா் அருகே பேரையூா்- கள்ளிகுளம் சாலையில் இரு வாகனங்களும் நேருக்கு நோ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலே 4 பேரும் பலத்த காயமடைந்து உயிரிழந்தனா்.
தகவலறிந்த முதுகுளத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் ராகவேந்திரா ரவி சம்பவ இடத்திற்குச் சென்று சடலங்களைக் கைப்பற்றி முதுகுளத்தூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பினாா்.
மேலும் விபத்து குறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். விசாரணையில் நான்கு பேரும் மதுபோதையில் வாகனங்களில் சென்றுள்ளதாக தெரிவித்தனா்.