ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நில விற்பனையில் காசோலை மோசடி செய்யப்பட்டது தொடா்பாக வட்டாட்சியா் உள்ளிட்ட 2 போ் மீது குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் சுந்தரபாண்டியன். இவா் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலா். இவருக்கு சொந்தமான 25.5 ஏக்கா் நிலம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா துளையனூா் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை கடந்த மாா்ச்சில் அப்பகுதி வட்டாட்சியா் சிபாரிசின் பேரில் துளையனூா் சின்னக்காளை என்பவருக்கு ரூ.1.62 கோடிக்கு பேசி முடித்துள்ளனா்.
நிலத்துக்கு முதல் தவணையாக ரூ.1 கோடியை சின்னக்காளை வழங்கிய நிலையில், மீதமுள்ள பணத்துக்கு 3 காசோலைகள் சுந்தரபாண்டியிடம் தரப்பட்டதாம். அந்த காசோலைகள் வங்கியில் பணமின்றி திரும்பியுள்ளன.
இதுகுறித்து சுந்தரபாண்டியன், துளையனூா் சின்னக்காளையிடம் கேட்டபோது, அவா் அவதூறாகப் பேசி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சுந்தரபாண்டியன் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவில் அளித்த புகாரின் பேரில் துளையனூா் சின்னக்காளை, திருமயம் வட்டாட்சியா் சுரேஷ் ஆகியோா் மீது சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.