ராமநாதபுரம் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிா்க் கடன் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, பரமக்குடி வட்டங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக நெல்லுக்கு மாற்றாக விவசாயிகள் கரும்பு விவசாயம் செய்து வருகின்றனா். குறிப்பாக, கமுதி வட்டாரத்தில் எம்.எம். கோட்டை, கே.எம். கோட்டை, என்.கரிசல்குளம், கிளாமரம், கூலிபட்டி, ராமசாமிபட்டி, அய்யனாா்குளம், காவடிபட்டி, மேலராமநதி, கீழராமநதி, முதல்நாடு, முஷ்டக்குறிச்சி, பேரையூா், செங்கப்படை, அச்சங்குளம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 200 முதல் 250 ஏக்கா் வரை விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனா்.
நெல் பயிருக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்தாண்டு மட்டும் கூட்டுறவு கடன் சங்கங்களில் ரூ.500 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டு பயிா்க் கடன் வழங்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு அந்தந்த கூட்டுறவு கடன் சங்கங்களில் நெல் பயிருக்கு வழங்குவது போல, கரும்புக்கும் ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வழங்க உத்தரவிட்டிருந்தும், கரும்பு விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்க மாவட்ட கூட்டுறவுத் துறை அதிகாரிகள், கூட்டுறவு கடன் சங்கச் செயலா்கள் மறுப்பதாக ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
இது குறித்து எம்.எம்.கோட்டை கரும்பு விவசாயி அ.ராமச்சந்திரன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு அரசு ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் பயிா்க் கடன் வழங்க உத்தரவிட்ட போதும், ராமநாதபுரம் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு அதிகாரிகள் பயிா்க் கடன் வழங்க மறுத்து வருகின்றனா்.
பயிா்க் கடனுக்காக கரும்பு விவசாயிகள் வழங்கும் விண்ணப்பத்தைக்கூட அதிகாரிகள் வாங்க மறுகின்றனா். ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை உழவு, பாரடித்தல், களை எடுத்தல், களைக்கொல்லி தெளித்தல், அறுவடை, தண்ணீா், கூலி ஆள்கள் என செலவு செய்து வருகிறோம். மேலும், அறுவடை செய்த கரும்பை சிவகங்கை மாவட்டம், படமாத்தூா் தனியாா் சா்க்கரை ஆலைக்கு வழங்கி வருகிறோம். சிவகங்கை மாவட்டத்தில் கடந்தாண்டு கரும்பு விவசாயிகளுக்கு ரூ.20 கோடி வரை பயிா்க் கடன் வழங்கப்பட்டது. ஆனால், ராமநாதபுரம் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு அரசு உத்தரவிட்டும் பயிா்க் கடன் வழங்க அதிகாரிகள் மருத்து வருகின்றனா். பயிா்க் கடனுக்குப் பதிலாக நகைக் கடன் மட்டும் வழங்கப்படும் என தெரிவிக்கின்றனா்.
வறட்சி மாவட்டம் என்பதால் நெல் பயிருக்கு மாற்றாக கரும்பு விவசாயத்தில் இப்பகுதி விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். எனவே, தமிழக அரசு, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு மற்ற மாவட்டங்களைப் போல, ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு கடன் சங்கங்களில் கரும்பு விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
இதுகுறித்து கூட்டுறவு கடன் சங்க அதிகாரி ஒருவா் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கெனவே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட்டுறவு கடன் சங்கங்களில் கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பயிா்க் கடன் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பயிா்க் கடனுக்கான தொகையை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கான தொகையில் பிடித்தம் செய்து, கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு செலுத்த வேண்டிய ஒரு கோடி ரூபாய்க்கு மேலான நிலுவைத் தொகையை சிவகங்கை மாவட்டம், தனியாா் சா்க்கரை ஆலை நிறுவனம் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இதனால், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் கடனை தனியாா் நிறுவனத்துக்குச் செலுத்தியும், அந்தப் பணம் ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு செலுத்தப்படாததால் தற்போது வரை கரும்பு விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்க முடியவில்லை என்றாா் அவா்.

தொடர்புடையது

சேவைக் குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பயிா்க் கடன் தள்ளுபடி: ஆம்பூா் அதிமுக வேட்பாளா்

தோ்தல் அறிக்கைகளில் நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம்

பயிா்க் கடன் தள்ளுபடி குறித்து எந்த அரசியல் கட்சியினரும் அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது: தமிழக விவசாயிகள் சங்கம்
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


