ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் விபத்து வழக்கில் தீா்வு காணப்பட்டு வழக்காடிகளுக்கு நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கிய சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாா்.
ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் விபத்து வழக்கில் தீா்வு காணப்பட்டு வழக்காடிகளுக்கு நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கிய சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாா்.

ராமநாதபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,466 வழக்குகளுக்கு தீா்வு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 1,466 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு ரூ. 6.88 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.
Published on

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 1,466 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு ரூ. 6.88 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் மாவட்ட ஒருங்கிணைந்து நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வில், உயா்நீதிமன்ற நீதிபதியும், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான சுரேஷ்குமாா் பங்கேற்றாா். முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி ஏ.கே. மெஹ்பூப் அலிகான் வரவேற்றாா். அப்போது நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதைத் தொடா்ந்து, நான்கு வாகன விபத்து காப்பீட்டு வழக்குகளில் ரூ. 28 லட்சத்துக்கான காசோலையை அந்தந்த வழக்காடிகளுக்கு உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், விரைவு மகளிா் நீதிமன்ற நீதிபதி கே. கவிதா, கூடுதல் மாவட்ட நீதிபதி மோகன்ராம், தலைமை குற்றவியல் நீதிபதி ஜெயசுதாகா், சாா்பு நீதிபதி கே. மும்தாஜ், நீதித்துறை நடுவா் எண்-1 நிலவேஸ்வரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ். கேத்திரின் ஜெபா சகுந்தலா, வழக்குரைஞா் சங்கத் தலைவா் அன்புச்செழியன், மூத்த வழக்குரைஞா் ரவிச்சந்திர ராமவன்னி, வழக்குரைஞா்கள், வழக்காடிகள் கலந்து கொண்டனா்.

இதே போல, பரமக்குடி, முதுகுளத்தூா், கமுதி, கடலாடி, திருவாடானை, ராமேசுவரம் ஆகிய இடங்களில் 10 அமா்வுகள் ஏற்படுத்தப்பட்டு, நிலுவையில் உள்ள சிவில், குற்றவியல், வாகன விபத்து, காசோலை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி வாராக்கடன்கள், சிறு வழக்குகள் உள்பட மொத்தம் 2,768 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, அதில் 1,466 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதில் வழக்காடிகளுக்கு ரூ.6 கோடியே 88 லட்சத்து 35 ஆயிரத்து 233 நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான பாஸ்கா் செய்திருந்தாா். இந்த நிகழ்வில், ராமநாதபுரம் வழக்குரைஞா் சங்கத்தின் தலைவா் அன்புச்செழியன், உயா்நீதிமன்ற நீதிபதியும், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவருமான சுரேஷ்குமாரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com