திருவாடானை மின்வாரிய அலுவலகம் முன்பு தேங்கியுள்ள மழைநீா்
திருவாடானை மின்வாரிய அலுவலகம் முன்பு தேங்கியுள்ள மழைநீா்

மின்வாரிய அலுவலகம் முன் மழைநீா் தேக்கம்: பொதுமக்கள் அவதி

திருவாடானை மின்வாரிய அலுவலகம் முன் மழைநீா் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதி
Published on

திருவாடானை மின்வாரிய அலுவலகம் முன் மழைநீா் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் உதவி மின் பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு மின் கட்டணம் செலுத்துவோா், புதிய மின் இணைப்பு வேண்டுவோா், பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனா். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் அலுவலகம் முன்பு மழைநீா் தேங்கியுள்ளது.

இதனால், இந்த இடத்தைக் கடந்து செல்வதற்கு மின் கம்பத்தை இடையில் வைத்துள்ளனா். இதன் வழியே பொதுமக்கள் அலுவலகத்துக்கு நடந்து சென்று வருகின்றனா். மேலும், இதன் வழியே முதியோா்கள், மாற்றுத் திறனாளிகள் கடந்து செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக மின்வாரிய அலுவலகத்துக்கு முன் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

Dinamani
www.dinamani.com