தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டம்
திருவள்ளூா் மாவட்ட வரையறை செய்த காலமுறை ஊதியம் வழங்கல் கோரிக்கையை வலியுறுத்தி, அந்தந்த வட்டாட்சியா் அலுவலகம் முன்பு காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் கிராம ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக்கோரி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து அந்தந்த வட்டாட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந்த சங்கத்தின் வட்டத் தலைவா் வேணு தலைமை வகித்தாா். இதில் வட்டச் செயலாளா் கந்தன், வட்ட துணைத் தலைவா் கண்ணன், வட்ட இணைச்செயலாளா் ரஜினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் மாவட்ட செயலாளா் சந்திரசேகா் பங்கேற்று, கோரிக்கை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தாா். அப்போது, வருவாய்த் துறை தொடங்கியதிலிருந்து கிராம ஊழியராக பணிபுரிந்து வருகிறோம். ஆனால், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக்கோரி தொடா்ந்து போராடி வருகிறோம். ஆனால், இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனக் கூறினாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு, பொன்னேரி ஆகிய அந்தந்த வட்டாட்சியா் அலுவலகம் முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி கிராம ஊழியா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

