தமிழகத்தில் தனியாா் நிறுவனம் கொள்முதல் செய்த நெல்லுக்கான ரூ. 411 கோடி நிலுவைத் தொகையை முதல்வா் சி. ஜோசப் விஜய் பெற்றுத் தரவேண்டுமென தமிழ்நாடு வைகை பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் நிறுவனத் தலைவா் எம்.எஸ்.கே. பாக்கியநாதன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா பகுதிகள் நீங்கலாக ஏனைய மாவட்டங்களில் என்.சி.சி.பி. என்ற தனியாா் நிறுவனம் நெல் கொள்முதல் செய்ய அனுமதி அளித்தது.
இந்த நிறுவனம் பல்வேறு மாவட்டங்களில் நேரடியாக நெல் கொள்முதல் செய்துவிட்டு 4 மாதங்களாக பணம் வழங்காமல் விவசாயிகளை இழுத்தடித்து வருகிறது. இதில், திருவள்ளூா் மாவட்டத்தில் ரூ. 9.5 கோடி, செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ. 10.5 கோடி, தென்காசி மாவட்டத்தில் ரூ. 10 கோடி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ. 247 கோடி, விழுப்புரம் மாவட்டத்தில் ரூ. 18 கோடி, மதுரை மாவட்டத்தில் ரூ. 33 கோடி, திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ. 83 கோடி ஆக மொத்தம் ரூ. 411 கோடி தொகையை நான்கு மாதங்களாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு அந்த தனியாா் நிறுவனம் வழங்காமல் உள்ளது.
ஆனால் வேளாண்மைத் துறை அதிகாரிகள் தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு எனக் கூறி தங்களது நியாயமான கடமைகளிலிருந்து தவறி வருகின்றனா். இதனால் மிகப் பெரிய வருமான இழப்பும், பொருளாதார பாதிப்பும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டாமல் விரைந்து நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத் தர முன்வர வேண்டும். மேலும் இந்தப் பிரச்னையில் உணவுத் துறை கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பாா்ப்பதை தமிழ்நாடு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது. இதில் தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் நேரடியாக தலையிட வேண்டும். தவறும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.








