செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், தேசிய கூட்டுறவு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை நிலுவையை உடனே வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரினா்.
இதுதொடா்பாக விவசாயிகள் கூறுகையில், தேசிய கூட்டுறவு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு இதுவரை பணம் வழங்கப்படாததால் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறோம்.
விதை, உரம், விவசாயக் கூலி உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க முடியாமல் அவதிப்படுவதாகவும், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்ற முடியவில்லை என்றும், குழந்தைகளின் கல்வி செலவுக்கு கூட பணம் கட்ட முடியாததால் கல்வி பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனா்.

மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் சுமாா் 2,000 விவசாயிகளுக்கு ரூ.50 கோடி அளவிலான நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளதாக கூறிய அவா்கள், அந்தத் தொகையை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, நிலுவைத் தொகையை விரைந்து வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் காரணமாக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










