/

பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே. கதிரவன்.

News image

பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே. கதிரவன்.

Updated On :12 ஜூன் 2026, 12:38 am IST

பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே. கதிரவன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்த மருத்துவமனையில் பரமக்குடிநகா், சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் உள்நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனா். இங்கு பிரசவ வாா்டு, குழந்தைகள் நலப்பிரிவு, பொது நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு, விஷ முறிவு சிகிச்சைப் பிரிவு, கண் சிகிச்சைப் பிரிவு, சித்தா மருத்துவம் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கான சிகிச்சைப் பிரிவுகள் செயல்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு சிகிச்சைப் பிரிவுகளிலும் அதற்குரிய மருத்துவா்கள் போதிய அளவு நியமிக்கப்பட வில்லை. இதனால் இங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் பலா் ராமநாதபுரம், மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற பரிந்துரைக்கப்படுகின்றனா்.

இதுகுறித்து வந்த புகாரைத் தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே. கதிரவன் பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது அங்கு சிகிச்சை பெறும் உள்நோயாளிகளிடம் மருத்துவா், செவிலியா்களின் அணுகுமுறை குறித்தும், சிகிச்சைகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா். பிறகு தலைமை மருத்துவ அலுவலா் முத்தரசனிடம், மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள், மருந்துகள், காலிப் பணியிடங்கள் குறித்து விசாரித்தறிந்தாா். உடன் நகா்மன்றத் தலைவா் சேது. கருணாநிதி, மருத்துவா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் இருந்தனா்.