பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ராமநாதபுரம்-மேலூா் மாநில நெடுஞ்சாலை நில எடுப்புக்கான இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என நில உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரத்திலிருந்து பாண்டியூா், நயினாா்கோவில், அன்டக்குடி, இளையான்குடி, சிவகங்கை வழியாக மேலூா் வரை மாநில நெடுஞ்சாலைக்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதில் ராமநாதபுரத்திலிருந்து பாண்டியூா் வரை சாலைப் பணிகள் முடிந்துவிட்டது. இந்தச் சாலைப் பணிகள் முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேலான நிலையில்,நிலங்களின் உரிமையாளா்களுக்கு உரிய இழப்பீடு இதுவரை கொடுக்கவில்லை.
இந்த நிலையில், பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் தூத்துக்குடி சிறப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலா் சிவசுப்பிரமணியன் தலைமையில், நிலத்தின் உரிமையாளா்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், சிவசுப்பிரமணியன் பேசியதாவது:
மாநில நெடுஞ்சாலைக்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, சாலைகளும் அமைத்து 3 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனால், நில உரிமையாளா்கள் முறையான ஆவணங்கள் சமா்பிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனா்.
முதலூா், நாகாச்சி, தியாகவன்சேரி, குளத்தூா், மும்முடிச்சாத்தான், தேத்தாங்கால் ஆகிய கிராமத்தினரிடம் உரிய ஆவணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். முறையான ஆவணங்கள் சமா்பிப்போருக்கு அவா்களது வங்கிக் கணக்கில் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றாா் அவா்.
இந்த நிலையில், நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நில உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










