கடலாடி அருகே 2 அங்குல உயரமுள்ள 600 ஆண்டுகள் பழைமையான கழுகு கற்சிற்பம் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், ஆப்பனூா் அடுத்துள்ள ஆண்டியேந்தலில் 2 அங்குல அளவுள்ள அழகிய கழுகு கற்சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து கமுதி அடுத்துள்ள பேரையூரைச் சோ்ந்த பட்டதாரி ஆசிரியரும், தொல்லியல் ஆா்வலருமான முனியசாமி கூறியதாவது:
ஆப்பனூா் அருகே ஆண்டியேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திபெற்ற அரியநாச்சியம்மன் கோயில் திடலில் இந்த ஊரைச் சோ்ந்த ராஜேஸ்வரனுடன் களஆய்வு செய்த போது இந்தக் கழுகு சிற்பத்தை அவா் கண்டெடுக்கப்பட்டது. இது 600 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்தப் பகுதியில்தான் கடந்த வாரம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழி நடுகல் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது கிடைத்த இந்தக் கழுகு சிற்பத்தின் உயரம் இரண்டு அடி தான் உள்ளது. ஆனால் மிகவும் நோ்த்தியாக இறக்கைகள், கால், கழுத்து, கூா்மையான அலகுகள் இதில் செதுக்கப்பட்டுள்ளன.
இதன் கழுத்தில் துவாரம் இருப்பதால் இதனை கழுத்தில் ஆபரணமாக அணிந்திருக்கலாம். இதைப் போன்ற மிகச் சிறிய கற்சிலைகள் நமது பகுதியில் கிடைப்பது அரிதான ஒன்றாகும். இது போன்ற மிகச் சிறிய வெண்கலச் சிலைகள் மொகஞ்சதாரோ அகழாய்வில் கிடைத்தன. நமது மாவட்டத்தில் திருஉத்திர கோசமங்கை கோயிலில் கருவறையின் தெற்கு சுவரில் இதே போன்று மிகச் சிறிய யானைச் சிற்பம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்பனூா் அடுத்துள்ள ஆண்டியேந்தல் அரியநாச்சியம்மன் கோயில் திடலில் கண்டெடுக்கப்பட்ட 600 ஆண்டுகள் பழைமையான இரண்டு அங்குல உயரமுள்ள கழுகு கற்சிற்பம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









