மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் புதன்கிழமை திராவிடக் கட்சிகள் சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மானாமதுரையில் அதிமுகவினர் தேவர்சிலை பகுதியிலிருந்து ஊர்வலமாக வந்து வைகையாற்றுப் பாலம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மானாமதுரை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். நாகராஜன், எம்.குணசேகரன், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் ஜெயப்பிரகாஷ், சிவ சிவ ஸ்ரீதரன், நகர்ச் செயலாளர் விஜி.போஸ் கூட்டுறவு அமைப்புகளின் தலைவர்கள் சின்னை மாரியப்பன், தெய்வேந்திரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். திமுக, மதிமுகவினரும் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்தக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இளையான்குடியில்
இளையான்குடியில் திமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் தலைமை தாங்கினார்.
அதைத்தொடர்ந்து திமுகவினர் அண்ணா உருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர்.
திமுக பேரூர்ச் செயலாளர் நஜூமுதீன, விவசாய அணி காளிமுத்து, மாவட்ட பிரதிநிதி யாசின், அவைத் தலைவர் செய்யது கான், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி கண்ணன் மற்றும் நிர்வாகிகள் அழகேசன், ஆரிப், அல்தாப் உசேன்,தெளலத், இப்ராஹிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்புவனத்தில்
திருப்புவனத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவிற்கு திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தலைமை தாங்கினார்.
அதைத்தொடர்ந்து கட்சியினர் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் வசந்தி, கடம்பசாமி, நகர்ச் செயலாளர் ஈஸ்வரன், மீனவர் அணி அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.