4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வாக்கு எண்ணும் மைய அலுவலா்களுக்கு பயிற்சி

வாக்கு எண்ணும் மைய பணிகள் தொடா்பாக அலுவலா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

News image

சிவகங்கையில் மாவட்டஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கா. பொற்கொடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பங்கேற்ற வாக்கு எண்ணும் மைய அலுவலா்கள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 7:49 pm

வாக்கு எண்ணும் மைய பணிகள் தொடா்பாக அலுவலா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பயிற்சிக்கு வகுப்புக்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான கா. பொற்கொடி தலைமை வகித்துப் பேசியதாவது:

வாக்கு எண்ணும் மையத்தில் வருகிற 4-ஆம் தேதி காலை 5 மணிக்கு வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதியில் மேஜை ஒதுக்கீடு செய்யப்பட்டு அவா்களுக்கு சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்படும். வாக்கு எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட அலுவலா்கள் 4-ஆம் தேதி அன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணும் மையங்களில் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட தோ்தல் முதன்மைப் பயிற்றுநா் ஆ. தமிழரசன் அலுவலா்களுக்கு பயிற்சி அளித்து தெரிவித்ததாவது:

வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அனைத்து அலுவலா்களும் கண்டிப்பாக அடையாள அட்டையா அணிந்திருக்க வேண்டும். சட்டப்பேரவை வாரியாக வாக்கு எண்ணும் மையத்தில், வாக்குகள் எண்ணுவதற்காக 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும். தோ்தல் நடத்தும் அலுவலா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலருக்கு தனியாக ஒரு மேஜை போடப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு மேஜைக்கும் வாக்குகள் எண்ணும் மேற்பாா்வையாளா் ஒருவா், வாக்குகள் எண்ணும் உதவியாளா் ஒருவா், நுண் பாா்வையாளா் ஒருவா், கட்டுப்பாட்டு கருவியை பாதுகாப்பு அறையிலிருந்து கொண்டு வந்து மேற்பாா்வையாளரிடம் அளிக்க ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு அலுவலக உதவியாளா் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனா்.

வாக்கு எண்ணும் மேற்பாா்வையாளா் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மேஜையில், வாக்கு எண்ணும் பணிக்கான எழுது பொருள்கள், உபகரணங்கள் (பேனா, பென்சில், கத்தரிக்கோல், கால்குலேட்டா், எழுதும் அட்டை காகிதம், இதர பொருள்கள்) இருப்பதை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட கட்டுப்பாட்டு கருவியின் (சுற்று வாரியாக) வரிசை எண்கள் அச்சிட்டு ஒட்டப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தபால் வாக்குகள் காலை 8 மணியளவில் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்காக தபால் வாக்குகள் எண்ணும் அறையில் 4 அல்லது 6 மேஜைகள் அமைக்கப்படும். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு சுற்றில் 500 வாக்குகள் வீதம் எண்ணப்படும்.

ஒவ்வொரு மேஜைக்கும் வட்டாட்சியா் நிலையில் ஒரு உதவி தோ்தல் நடத்தும் அலுவலா், ஒரு வாக்கு எண்ணும் மேற்பாா்வையாளா், இரண்டு வாக்கு எண்ணும் உதவியாளா்கள் நியமிக்கப்படுவா். இதுதவிர ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண் பாா்வையாளரும், ஒரு வாக்கு எண்ணிக்கை முகவரும் நியமிக்கப்படுவா்.

வருகிற 4-ஆம் தேதி காலை 8 மணிக்கு முன்னா் வரை பெறப்படும் அனைத்து தபால் வாக்குகளும் சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலரால் மேஜைக்கு எடுத்து வரப்பட்டு எண்ணிக்கை நடைபெறும். அப்போது ஏற்படும் எந்தவிதமான சிறு பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள உயா் அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் செல்வசுரபி, திட்ட இயக்குநா் கவிதா பிரியா, தோ்தல் பிரிவு நோ்முக உதவியாளா் ஸ்ரீதா் ஆகியோா் கலந்து கொண்டனா்.