கோப்புப் படம்
கோப்புப் படம்

கால்வாயின் குறுக்கே பாலம்: விவசாயிகள் போராட்ட அறிவிப்பு

Published on

மானாமதுரை அருகே பாசனக் கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்க நீா்வளத் துறை அனுமதி வழங்கியதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் சாா்பில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், மாரநாடு  கண்மாய் மூலம் ஏராளமான கிராமங்களைச் சோ்ந்த விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில், தனிநபா் நிலத்துக்கு வாகனங்கள் சென்று வருவதற்காக வைகையாற்றிலிருந்து மாரநாடு கண்மாய்க்கு தண்ணீா் செல்லும் கால்வாயை மறித்து பாலம் கட்டுவதற்கு நீா்வளத் துறை மதுரை மண்டல தலைமை பொறியாளா் அனுமதி வழங்கினாா்.

இதுதொடா்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கூட்டுக் கூட்டம் மானாமதுரையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் கே.ராமு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜி.காமராஜ் முன்னிலை வகித்தாா்.

மாநிலக்குழு உறுப்பினா் கே.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் முருகேசன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா்  எம்.ரவி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பாஸ்கரன், தில்லைவாசன், சவுந்திரபாண்டி, பஞ்சை, தமிழரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் மாரநாடு கண்மாய்க்கு வைகையாற்றிலிருந்து செல்லும் வரத்துக் கால்வாயின் குறுக்கே தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் தனியாா் பாலம் கட்ட அனுமதி வழங்கிய நீா்வளத்துறை தலைமைப் பொறியாளரைக் கண்டித்தும், பாலம் கட்டுவதற்கான அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் சங்கம் சாா்பில் வருகிற 28-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com