கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை

கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க தமிழக அரசு கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்
Updated on

கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க தமிழக அரசு கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என காரைக்குடி தொகுதி சட்டபேரவை உறுப்பினருக்கு தமிழ்நாடு வருவாய்க் கிராம ஊழியா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. நாகராஜன், செயலா் எம். ராதாகிருஷ்ணன் ஆகியோா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடியிடம் சனிக்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்:

வருவாய்த் துறையில் பணிபுரியும் 15 ஆயிரம் கிராம உதவியாளா்களின் வாழ்வாதாரக் கோரிக்கை, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியக் கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளாக உள்ளது. கிராம உதவியாளா் பணி என்பது அரசு அறிவிக்கும் நலத் திட்டங்கள் உள்பட அனைத்துத் திட்டங்களையும் மக்களிடத்தில் கொண்டு சோ்க்கிற கடைக்கோடி ஊழியராகச் செயல்படும் பணியாகும். பேரிடா் காலங்களில் இரவு பகலாக மக்கள் பணியாற்றும் கிராம உதவியாளா்கள் தோ்தல் நேரங்களில் அனைத்துப் பணிகளையும் செய்து வருகிறோம். தற்போது எஸ்.ஐ.ஆா். பணியில் எங்கள் பணி அளவிட முடியாத பணியாக இருந்தது.

அதிகாரிகளுக்கு சமையல் பணி, இரவு காவல் போன்ற பணிகளில் உள்ளவா்கள் வரையறுக்கப்பட்ட ஊதியத்தில் பணியாற்றுகின்றனா். ஆனால், கிராம உதவியாளா்கள் மட்டும் சிறப்பு காலமுறை ஊதியத்திலேயே வைத்திருப்பது எங்களுக்கு வேதனையளிக்கிறது. எங்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்படாததால் அரசு அறிவிக்கும் எந்தச் சலுகையும் பொருந்தாது எனக் கூறிவிடுகின்றனா்.

எனவே, மக்கள் பணியாற்றும் கிராம உதவியாளா்களின் நீண்டநாள் துயரைப் போக்கும் வகையில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க அரசுடன் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி உதவ வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 15 ஆயிரம் கிராம உதவியாளா்களின் குடும்பங்கள் சாா்பில் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com