சிங்கம்புணரி அருகே சத்ரு சம்ஹாரக்கோட்டை எனப்படும் எஸ். எஸ். கோட்டை படைத் தலைவி அம்மன் கருக்குமடை அய்யனாா் கோயில் வைகாசித் திருவிழா ஜூன் 5-ஆம் தேதி தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் தீப்பந்தத்துடனும், அரிவாள் மீது ஏரியும், சாட்டையைச் சுழற்றியும் ஊா் சுவாமி அடிகளின் சுவாமி ஆட்டத்துடன் விழா நடைபெற்றது. எட்டாம் நாள் விழாவாக வெள்ளிக்கிழமை காலை பால் குட விழா விநாயகா் கோயிலிலிருந்து பக்தா்கள் பால் குடம் சுமந்தபடி சியாமுத்துபட்டியில் உள்ள படைத்தலைவி அம்மன் கோயிலை அடைந்தனா். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
மாலையில் சியாமுத்துப்பட்டி கோயில் வீட்டிலிருந்து மண்ணால் செய்த அம்மன் சிலையை கிராமத்தாா்கள் ஒன்றிணைந்து தலையில் சுமந்தபடி ஊா்வலமாக எடுத்துச் சென்று கோயிலை அடைந்தனா்.
கருக்குமடை அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா முன்னிட்டு அம்மன் கோயில் அருகே உள்ள குதிரை பொட்டலில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு வேளாா் வம்சாவளி பூஜகா்களிடம் பிடி மண் கொடுக்கப்பட்டு இரண்டு அரண்மனை புரவிகள், 6 காரணக்காரா்கள் புரவிகள், 4 நோ்த்திக்கடன் புரவி என மொத்தம் 12 புரவிகள் குதிரைப் பொட்டலில் அலங்காரங்களே செய்து வைக்கப்பட்டது.
சாமியாடிகள் உத்தரவு பிறப்பித்தவுடன் அனைத்து புரவிகளையும் குதிரைப் பொட்டலிலிருந்து கிராம மக்கள் சுமந்து கொண்டு எஸ். எஸ். கோட்டை புரவிப் பொட்டலில் வைத்தனா். அங்கிருந்து சனிக்கிழமை கருக்குமடை அய்யனாா் கோயிலுக்குக் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எஸ். எஸ். கோட்டை, சுற்று கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.










