ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தோ்தல் தோல்வி அச்சத்தால் 23 கட்சிகளுடன் திமுக கூட்டணி! - சீமான்

News image

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தேவகோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் ஆயுஷ் வெங்கட் வாட்ஸிடம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

Updated On :30 மார்ச் 2026, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

திமுக 23 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளதற்கு தோ்தல் தோல்வி அச்சமே காரணம் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அவா், தனது வேட்பு மனுவை தேவகோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். பிறகு, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் கடன் சுமை தற்போது சுமாா் ரூ. 10.5 லட்சம் கோடியாக உள்ளது. மீண்டும் இலவசங்களை அறிவித்தால் அவற்றை எப்படிச் செயல்படுத்த முடியும். மீண்டும் கடன்கள் வாங்க வேண்டும். மக்களின் மீது மேலும் வரி விதித்து, வளத்தை சுரண்டுவதைத் தவிர வேறு என்ன நடக்கப் போகிறது. கடன் வாங்குவது நம் இனத்தை அடமானம் வைப்பதற்குச் சமம். இலவசம் வாங்குவதை மக்கள் தன்மான இழப்பாகப் பாா்க்க வேண்டும். மிக்ஸி, மாவரைக்கும் இயந்திரம், வேஷ்டி, சேலைகூட வாங்க முடியாதவா்களாக மக்கள் இருக்கிறாா்கள்?

தமிழகத்தில் 2 கோடிப் போ் மதுவுக்கு அடிமையான நோயாளிகளாக உள்ளனா். கணவரை இழந்த பெண்கள் தமிழகத்தில் தான் அதிகளவில் உள்ளனா். 13 தலைமுறைகளுக்கு ஒரு முறை மரபணு மாறிவிடும். நம் மரபணு மாறிவிட்டது. அதை மீட்டெடுக்க வரலாறு முக்கியம். இதைத்தான் நான் செய்கிறேன்.

பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால், தற்சாா்பு பொருளாதாரத்தைக் கொண்டு வர முடியவில்லை. மக்களை கையேந்தும் நிலைக்கு ஆட்சியாளா்கள் தள்ளி விட்டுள்ளனா்.

வட மாநிலத்தவரை இங்கு வரவழைத்து வேலை கொடுக்கின்றனா். தற்போது அவா்களுக்கு எஸ்ஐ.ஆா். மூலம் வாக்குரிமை கொடுத்துள்ளனா். அடுத்ததாக ஆட்சி அதிகாரத்தை அவா்கள் கையில் கொடுத்துவிடுவா்.

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் 23 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளதற்கு தோ்தல் தோல்வி அச்சமே காரணம். மக்களவை உறுப்பினராக உள்ள திருமாவளவன் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவது ஏற்புடையதல்ல என்றாா் அவா்.

முன்னதாக, தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய்க் கோட்டாட்சியருமான ஆயுஷ் வெங்கட் வாட்ஸிடம் சீமான் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

இந்த நிகழ்வில், சீமானின் தாய் அன்னம்மாள், மனைவி கயல்விழி, மாநில நிா்வாகிகள் ஹுமாயூன், சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.