உத்தமபாளையம் பேரூராட்சி முன்பாக தடைசெய்யப்பட்ட பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சமூக ஆர்வலர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் பிடிஆர் காலனி, இந்திரா காலனி, தாமஸ் காலனி, மெயின் பஜார் போன்ற பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று அதிகளவில் பரவி வருவதால் அப்பகுதியை பேரூராட்சி நிர்வாகம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு செய்தது.
அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் இயங்கும் அனைத்து வர்த்தக கடைகளும் மூட வலியுறுத்தப்பட்டது. ஆனால் தடைசெய்யப்பட்ட பகுதியான 5 வார்டு பி டி ஆர் காலனி பகுதியில் இயங்கும் டாஸ்மார்க் கடை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருவதால் உத்தமபாளையத்தில் நோய்தொற்று தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அப் தாகிர் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி உத்தமபாளையம் பேரூராட்சி முன்பாக தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சமாதானம் செய்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.