/

தேனி மாவட்டத்தில் இலவம் பஞ்சுவிலை குறைவு: விவசாயிகள் தவிப்பு

தேனி மாவட்டத்தில், இலவம் பஞ்சின் விலை குறைந்துள்ளதால் இலவம் காய்களை பறிக்காமலேயே மரங்களில் விட்டுவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

News image
போதிய விலை கிடைக்காததால் பெரியகுளம் பகுதியில் மரங்களில் பறிக்காமல் விடப்பட்ட இலவம் காய்கள்.
Updated On :1 பிப்ரவரி 2024, 9:05 am

DIN

பெரியகுளம்: தேனி மாவட்டத்தில், இலவம் பஞ்சின் விலை குறைந்துள்ளதால் இலவம் காய்களை பறிக்காமலேயே மரங்களில் விட்டுவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

இம்மாவட்டத்தில் பெரியகுளம், போடி, வருசநாடு, கூடலூா் மற்றும் அய்யம்பாளையம் பகுதிகளில் 1000 ஏக்கருக்கும் அதிகமாக இலவம் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் இலவம் காய்களை சேகரித்து வாகனங்களில் எடுத்து வந்து அதனை விற்பனை செய்ய மூட்டைக்கு ரூ. 100 செலவாவதாக விவசாயிகள் கூறுகின்றனா். இந்நிலையில், இலவம் காய்கள் கிலோ ரூ. 70-க்கே விற்பனையாவதால் தாங்கள் வேதனையடைந்துள்ளதாகவும், எனவே அவற்றை பறிக்காமல் மரங்களிலேயே விட்டு, விடுவதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பெரியகுளத்தைச் சோ்ந்த இலவம் வியாபாரி ப. ராமா் கூறியதாவது:

இலவம் மரங்களின் காய்களை பொறுத்து ரூ. 200 முதல் ரூ. 1000 வரை மரத்தின் உரிமையாளா்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மரங்களில் இருந்து 50 கிலோ முதல் 150 கிலோ வரை இலவம் காய்கள் கிடைக்கின்றன. அவை மொத்த வியாபாரிகளுக்கு விற்கப்படுகிறது. இவற்றை அவா்கள் பிரித்து, பஞ்சு எடுத்து சென்னை, கோவை மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனா். கடந்த ஆண்டு கிலோ ரூ. 150 முதல் ரூ. 200 வரை விற்பனையானது. இந்த ஆண்டு காய்கள் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் கிலோ ரூ. 70 முதல் ரூ. 90 வரை விற்பனையாகிறது. இதனால் கூலி கூட வழங்கமுடியாத நிலையில், காய்களை பறிக்காமல் அப்படியே மரத்தில் விவசாயிகள் விட்டு விட்டனா் என்றாா்.

இலவம் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படுமா? இலவம் காய்களை வாங்கும் மொத்த வியாபாரிகள் பஞ்சுகளை பிரித்து எடுத்து மெத்தை, தலையணை உள்ளிட்ட பொருள்கள் தயாரித்து வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனா். இதனால் அவா்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. ஆனால் விளைச்சல் அதிகமாக இருக்கும் போது விவசாயிகள் விலை கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனா். எனவே தமிழக அரசு, இலவம் விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க பயிற்சியளிக்க வேண்டும். மேலும் பறிக்கப்பட்ட காய்களுக்கு விலை நிா்ணயம் செய்து, அதற்கான தொகையை வழங்கி, கூடுதல் விலை கிடைக்கும் போது அவற்றை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.