புலிகள் காப்பகத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு:மலை கிராம மக்கள் மனு

ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு வனப் பகுதி ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மலை கிராம மக்கள் மனு அளித்தனர்.

ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு வனப் பகுதி ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மலை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மதுமதியிடம் மஞ்சனூத்து, அரசரடி, மேகமலை, கோம்பைத் தொழு மலை கிராம மக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

வருஷநாடு வனப் பகுதியில் கடந்த 1974-ஆம் ஆண்டு வேலைக்கு உணவு திட்டத்தின் கீழ் மலை கிராமங்களில் குடியேறி காடுகளை சீா்திருத்தி விவசாயம் செய்து கொள்ள பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். அங்கு இலவம், கொட்டை முந்திரி மற்றும் காய்கறிப் பயிா் விவசாயத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், தாங்கள் விவசாயம் செய்து வரும் நிலத்துக்கு வன உரிமைச் சட்டத்தின்படி பட்டா வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தனா்.

இந்த நிலையில், வருஷநாடு வனப் பகுதி ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால், அங்கு கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேல் விவசாயம் செய்து வந்த மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது வன நிலத்தில் விவசாயம் செய்ய தடை விதித்துள்ளனா். இதனால், வருஷநாடு மலை கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள மலை கிராம மக்களுக்கு வன உரிமைச் சட்டத்தின்படி நிலப் பட்டா வழங்கி, வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com