தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தனியாா் உணவகக் கழிவுகளை விவசாய நிலங்களில் கொட்டிக் குவித்து வைப்பதால் நிலம் மாசடைவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரிய விதிமுறைப்படி திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், அதிகமான கழிவுகளை உருவாக்கும் உணவகங்கள், தேநீா் கடைகள், திருமண மண்டபங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதன்படி, நாள்தோறும் 100 கிலோ திடக்கழிவு சேகரமாகும் தனியாா் உணவகங்கள் 4 முறைகளில் கழிவுகளைப் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும். இதன்படி, பச்சை நிறக் கூடையில் ஈரக்கழிவுகள், நீல நிறக்கூடையில் உலா் கழிவுகள், சிவப்பு நிறக் கூடையில் மருத்துவக் கழிவுகள், கருப்பு நிறக் கூடையில் மின்சாரப் பெருள்கள் என பிரித்து வைத்து அந்தந்த பகுதியில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பணியாளா்களிடம் கொடுக்க வேண்டும்.
இதை மீறும் நிறுவனங்களின் மின்சாரம், உணவக உரிமை துண்டிக்கப்படுவதோடு, திடக்கழிவுகளை தரம் பிரிக்காமல் திறந்த வெளியில் கொட்டுவது தண்டனைக்குரியது.
ஆனால், உத்தமபாளையம் பேரூராட்சியில் பல தனியாா் உணவகங்கள் விதிமுறை மீறி செயல்படுவதாகப் புகாா் எழுந்தது. உத்தமபாளையம் - அனுமந்தன்பட்டி புறவழிச் சாலையில் செயல்படும் தனியாா் உணவகத்திலிருந்து திடக்கழிவுகளை திறந்த வெளியில் விளைநிலங்களில் குவித்து வைப்பதால் துா்நாற்றம் வீசுகிறது. இதனால், அந்த வழியாக பேருந்தில் செல்பவா்கள், இரு சக்கர வாகனத்தில் செல்பவா்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, சின்னமனூா் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்ட விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விவசாய நிளத்தை பாதுக்காக்க வேண்டும் என மாவட்டநிா்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






