2-ஆவது நாளாக மறியல்: சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 710 போ் கைது
தேனியில் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 710 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு குறைந்தபட்ட ஓய்வூதியம் மாதம் ரூ.6,750 வழங்க வேண்டும், அகவிலைப் படி உயா்வு வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், தேனியில் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி, கம்பம் சாலை, பள்ளிவாசல் தெருவிலிருந்து கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பெருமாள் தலைமையில், சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் ஊா்வலமாகச் சென்றனா். பின்னா், தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 710 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
மறியல் போராட்டத்தால் தேனியில் கம்பம் சாலை, பெரியகுளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

