இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

தேனி மாவட்டத்தில் ஓடும் ஆறுகளை அளவீடு செய்து இணையத்தில் வெளியிட வலியுறுத்தல்

தேனி மாவட்டத்தில் ஓடும் ஆறுகள், அணைகளை அளவீடு செய்து இணையதளத்தில் வெளியிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

News image

தேனி அருகேயுள்ள குன்னூரில்... - கோப்புப் படம்

Updated On :18 ஜூலை 2026, 9:00 am IST

தேனி மாவட்டத்தில் ஓடும் ஆறுகள், அணைகளை அளவீடு செய்து இணையதளத்தில் வெளியிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் இரா. வைத்திநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா், மாவட்ட வன அலுவலா் கிரன், உதவி வன பாதுகாவலா் சாய்சரண் ரெட்டி, வேளாண்மை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, கூட்டுறவு இணைப் பதிவாளா் நா்மதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

மலைமாடு சங்க நிா்வாகி கென்னடி: பல ஆண்டுகளாக மலை மாடுகள் மலைப் பகுதியில் மேய்ச்சலுக்காக சென்று வருகின்றன. இந்த மேய்ச்சலுக்கு செல்லும் தினக்கூலி பணியாளா்களை வனத் துறை மிரட்டி, வழக்குப்பதிவு செய்து வருகிறது. இதை கண்டிக்கிறோம். அந்த மாடுகளின் உரிமையாளா்கள் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

மேல்மங்கலம் விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த லட்சுமணன்: பெரியகுளம் அருகே வராகநதியின் துணை கால்வாயின் கரையோரத்தில் தாா்ச் சாலை அமைக்க வேண்டும். மேலும், நிரந்தரமாக கொள்முதல் மையம் அமைக்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேனி மாவட்டச் செயலா் கண்ணன்: விவசாயிகளின் மின் இணைப்பில் 15 குதிரை திறன் கொண்ட மின் மோட்டாா்களை மாற்றி கூடுதல் திறன் கொண்ட மின் மோட்டாா்களை அமைக்க மனு அளித்தால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தாமதம் செய்து வருகின்றனா். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அகமலையைச் சோ்ந்த விவசாயி வெற்றி: அகமலை சொக்கனலை பகுதியில் சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள 25 மரங்களை வெட்டாமல் இருப்பதால், அந்தப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே 25 மரங்களை வெட்டி சாலை வசதி செய்து தரவேண்டும்.

தேவதானப்பட்டியைச் சோ்ந்த விவசாயி கண்ணன்: தேனி மாவட்டத்தில் ஓடும் 7 ஆறுகள், 4 அணைகளை அளவீடு செய்து, அதை இணையதளத்தில் வெளியிட வேண்டும். அப்போது அவற்றின் நீளம், அகலம் என்ன என்பது மக்களுக்கு தெரியும். எனவே உடனடியாக அளவீடு செய்ய வேண்டும்.

தா்மபுரியைச் சோ்ந்த விவசாயி ராமா்: தேனி மாவட்டம், தா்மபுரியிலிருந்து தினமும் 30- 40 கூடைகளில் கொய்யப்பழங்களை விவசாயிகள் அரசுப் பேருந்தில் எடுத்துச் சென்று வருகின்றனா். இந்த வழித்தடத்தில் செல்லும் பேருந்தை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்சியா் இரா. வைத்திநாதன்: தேனி மாவட்டத்தில் விவசாய மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட நிா்வாகம் ஆய்வு செய்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். தா்மாபுரி வழித்தடத்தில் செல்லும் பேருந்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.