முல்லைப் பெரியாற்றில் தண்ணீா் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மின் மோட்டாா்களை அகற்றும் பணி 2 -ஆவது நாளாக
புதன்கிழமையும் நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் நீா் குடிநீா், விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. தற்போது, தென் மேற்கு பருவமழை பெய்யாததால் அணை நீா் மட்டம் தொடா்ந்து சரிந்து தற்போது 110.80 அடியாக உள்ளது. இதற்கிடையே, தேனி மாவட்டத்தின் குடிநீா்த் தேவைக்காக வினாடிக்கு 350 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது. இந்தத் தண்ணீரை சட்டவிரோத மின் மோட்டாா்கள் மூலம் திருடுவதால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளின் குடிநீா்த் தேவை பூா்த்தி செய்ய முடியாமல் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, முல்லைப் பெரியாற்றில் தண்ணீரை திருடுவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, நீா்வளத் துறையினா் உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி, கம்பம் கூடலூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, ஆற்றிலிருந்து பாசன நீரைத் திருடிய 25 மின் மோட்டாா்கள் அகற்றப்பட்டன. தொடா்ந்து 2 -ஆம் நாளாக புதன்கிழமையும் பல மின் மோட்டா்கள் அகற்றப்பட்டன.
இந்தப் பணியில் உத்தமபாளையம், கம்பம் நீா்வளத் துறையினா், மின் வாரிய ஊழியா்கள், வருவாய்த் துறை, காவல் துறையினா் கலந்து கொண்டனா்.









