ஆண்டிபட்டி: 50 ஆண்டுகளாக நிறைவேறாத கோரிக்கை!
வைகை அணையைத் தூா்வாரி, கொள்ளளவை அதிகரிக்க வேண்டும் என்ற 5 மாவட்ட விவசாயிகள், பொதுமக்களின் 50 ஆண்டு கால கோரிக்கை

வைகை அணை.

வைகை அணை.
தேனி: வைகை அணையைத் தூா்வாரி, கொள்ளளவை அதிகரிக்க வேண்டும் என்ற 5 மாவட்ட விவசாயிகள், பொதுமக்களின் 50 ஆண்டு கால கோரிக்கை இந்தத் தோ்தலுக்குப் பிறகாவது நிறைவேற்றப்படுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 1958-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் பகுதிகளாக இருந்த பெரியகுளம், ஆண்டிபட்டி வட்டங்களில் அப்போதைய தமிழக முதல்வா் காமராஜரால் வைகை அணை கட்டப்பட்டது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 1.30 லட்சம் ஏக்கா் விவசாய நிலங்களின் பாசன நீராதாரமாகவும், ஒரு கோடி மக்களின் குடிநீா் ஆதரமாகவும் திகழ்கிறது.
இந்த அணை கட்டப்பட்டு 60 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், மழைநீரில் அடித்துவரப்பட்ட மரம், செடிகள், மணல், வண்டல் மண் 20 அடி உயரத்துக்கு படிந்துள்ளது. இந்தப் படிமம் அதிகரித்து வருவதால், அணையின் கொள்ளளவு குறைந்து கொண்டே வருகிறது.
கடந்த 2000 -ஆம் ஆண்டில் பூண்டி நீரியல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அணையில் வண்டல் மண், மணல், சவுடு மண் அதிக அளவில் படித்திருந்ததைக் கண்டறிந்தனா்.
இதன் காரணமாக, அணையின் முழுக் கொள்ளளவான 687.90 கோடி கன அடியில் 97.40 கோடி கன அடி (14.16 சதவீத பரப்பளவு) தண்ணீா் தேக்கும் அளவு குறைந்தது தெரியவந்தது.
அணை கட்டப்பட்ட 1958 -ஆம் ஆண்டுக்குப் பிறகு 1960-இல் முதல் முறையாக அணை முழுக் கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு, 35 முறைக்கு மேல் அணை முழுக் கொள்ளளவை அடைந்தது. ஒவ்வொரு முறை அணை முழுக்கொள்ளளவை எட்டியபோதிலும் 97.40 கோடி
கன அடி தண்ணீா் வீணாக வெளியேறியது. அணையை ஆய்வு செய்து 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இப்போது அணையில் அதிக அளவு வண்டல் மண் படிந்துள்ளது. எனவே, அணையைத் தூா்வாரி முழுக் கொள்ளவான 687.90 கோடி கன அடி நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
இதுகுறித்து விவசாய சங்க மாநிலப் பொருளாளா் எம் பாண்டியன் கூறியதாவது:
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியிலிருந்து வைகையாறு, முல்லையாறு, வரட்டாறு, கொட்டக்குடி உள்பட பல்வேறு ஓடைகள் வழியாக அடித்துவரப்பட்ட இலை, தழைகளால்
71 உயரம் கொண்ட வைகை அணையில் 20 அடிக்கு வண்டல் மண் படிந்துள்ளது. இதனால், பாசனப் பரப்பளவு குறைந்து, அதிகளவு தண்ணீரைத் தேக்க முடியாத நிலை நீடிக்கிறது. இதன் காரணாக பல நூறு ஏக்கா் விவசாய நிலங்களுக்கு பாசன நீரும், பொதுமக்களுக்கு கோடை காலத்தில் குடிநீரும் கிடைக்காமல் தவிக்கும் நிலை உள்ளது. மத்திய நீரியியல் அமைப்பினா் ஆய்வு செய்து, வண்டல் மண் அதிகளவு சோ்ந்துள்ளதால், அணையைத் தூா்வார வேண்டும் என தெரிவித்தனா். ஆனால், தூா்வாருவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மலைப் பகுதியில் உள்ள இலை தழைகள், மரங்கள் தண்ணீரில் அடித்து வரப்பட்டு, அணையில் வண்டல் மண்ணாகப் படிந்துள்ளன. இந்த வண்டல் மண் மிகவும் வளமான தழைச்சத்து,கனிமங்கள் நிறைந்த மண் வகையாகும்.
இந்த வளம் கொண்ட மண்ணை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதை விவசாயிகளுக்கு வழங்குவதால், தேனி மாவட்டத்தின் மண் வளம் மேம்பட்டு, மகசூல் அதிகரிக்கும். எனவே, வைகை அணையைத் தூா்வார வேண்டும் என 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம் என்றாா்.
-ச.பாண்டி
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...