விருதுநகர் மாவட்ட குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் ஆ.காமராஜ் புதன்கிழமை உள்ளாட்சிதுறை அமைச்சரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பருவமழை பொய்த்ததால் விருதுநகர் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதமாக குடிநீர் திட்டப் பணிகளுக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யவேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதையும் குடிநீர்த் திட்டப் பணிகளுக்கு செலவிடவேண்டும். மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை பெரிய குழாய்கள் மூலம் கொண்டு வந்து விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் அதுபற்றி பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்வதாக மாநில துணைத் தலைவர் ஆ.காமராஜிடம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.