நரிக்குடியை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரனுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் ஒன்றியச் செயலாளர் சின்னராஜா மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நரிக்குடி ஒன்றியம் திருச்சுழி தாலுகாவை சேர்ந்ததாகும். மாவட்டத்தின் எல்லையில் மிகவும் பின்தங்கிய பகுதியாக நரிக்குடி உள்ளது. நரிக்குடி ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளில் 176 கிராமங்கள் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியிலுள்ள கிராமங்கள் அனைத்துமே நரிக்குடியிலிருந்து 25 கி.மீ. தூரம் வரை உள்ளன.
சாதாரணமாக வருமான சான்றிதழ் பெறுவதாக இருந்தால் முதலில் கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்து வாங்கி பின்னர் வருவாய் ஆய்வாளரிடம் வாங்கி அதன் பின்னர் திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் வரவேண்டியுள்ளது. இப்பணி ஒரே நாளில் முடியாது. ஒவ்வொருவரிடமும் கையெழுத்து வாங்கவே ஒருநாள் ஆகிறது. இதுதவிர சாதிச்சான்றிதழ், பட்டா மாறுதல், ரேஷன் கார்டு பெறுவது உள்பட பல்வேறு தேவைகளுக்கு பொதுமக்கள் திருச்சுழி தாலுகா அலுவலகத்துக்கு வருகின்றனர். எனவே எந்த ஒரு தேவைக்காக வருவதாக இருந்தாலும் அந்த வேலை முடிய குறைந்தது ஒரு வாரம் ஆகிறது. கூலிவேலை, விவசாய வேலை செய்யும் மக்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுவதுடன் அன்றாட வேலை பாதிக்கப்படுகிறது. இக் கிராமப் பகுதிகளில் சரியான அளவில் பேருந்து வசதியும் இல்லை. இதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
மக்கள் 25 கி.மீ. தூரம் நரிக்குடி வந்து பின்னர் 15 கி.மீ. தொலைவிலுள்ள திருச்சுழி செல்ல வேண்டியிருப்பதால் பயண தூரம் அதிகமாகிறது. எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி நரிக்குடியை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.