விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் கம்பிக்குடி - நிலையூர் கால்வாய் திட்டம் முடங்கிப்போனதால், விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
காரியாபட்டி பகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக கண்மாய்களுக்கு நீர்வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு பல ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட கம்பிக்குடி - நிலையூர் கால்வாய் திட்டம், சென்னம்பட்டி கால்வாய்திட்டம் ஆகியவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. காரியாபட்டி ஒன்றியம் கம்பிக்குடி, பாப்பனம், சத்திரபுளியங்குளம், முடுக்கன்குளம் ஆகிய கண்மாய்கள் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளது.
மழைக் காலங்களில் கம்பிக்குடி பெரிய கண்மாய் நிரம்பிய பின்னர், பாப்பனம் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும். அங்கிருந்து அடுத்த கண்மாய்க்கு செல்லும். இப்படி முடுக்கன்குளம், சத்திரபுளியன்குளம் கண்மாய் வரை வரத்து கால்வாய் உண்டு. இந்த கம்பிக்குடி - நிலையூர் கால்வாய் திட்டம் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அறிவிக்கப்பட்டது. நிலையூரில் ஆரம்பிக்கப்பட்ட பணி, முழுமையாக முடிவடையாமல் உள்ளது. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் பொதுப்பணித்துறை மூலம் கரைகள், தண்ணீர் தேங்கும் இடம் பராமரிப்பு வேலைகள் நடந்துள்ள நிலையில் பாசனக் கால்வாய்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் இப்பகுதியில் சுமார் இருபதாயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதிபெறும். எனவே, கம்பிக்குடி - நிலையூர் கால்வாய் திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என இப்பகுதி விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.